Suganthini Ratnam / 2017 மார்ச் 23 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்
'இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை என்று தெரியவருவதுடன், எங்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்' எனக் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
'கடந்த 30 வருட யுத்தத்தால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, சித்தாண்டி ஸ்ரீஇராமகிருஸ்ண வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா அவ்வித்தியாலயத்தில் இன்று (23) நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கை தரக்கூடிய பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசாங்கத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் முழுமையான நம்பிக்கை வைத்து, எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பயணிக்க வேண்டும்.
அதற்கு அரசாங்கம் கோருவது போன்று இரண்டு வருடகால அவகாசத்தை வழங்கி, அதனை நடைமுறைபடுத்துவதற்கான அழுத்தத்தை நாங்கள் பிரயோகிக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே மலையக மக்களும் இருக்கின்றார்கள்' என்றார்.
'மேலும், தற்போது மாணவர்களின் பாடப் புத்தகத்தில் தமிழர் வரலாறு பல்வேறு இடங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது, இதை எவராவது திட்டமிட்டுச் செய்தார்களா? அல்லது, கடந்த காலத்தில் அது தொடர்பாகச் செயற்பட்டவர்கள் சரியாகச் செயற்படவில்லையா? என்ற கேள்வியை நாங்கள் கேட்க வேண்டியிருக்கின்றது.
தற்போது நான் இராஜாங்கக் கல்வி அமைச்சர் என்ற வகையில் தமிழர் வரலாற்றை பாடப் புத்தகத்தில் சரியான முறையில் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றேன். அதற்கு அத்துறை சார்ந்தவர்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளேன்.
வரலாற்றுப் பாடத்தில் மாத்திரம் அல்ல, இந்துசமயப் பாட நூல்களிலும் பல தவறுகள் காணப்படுகின்றன.
தற்போது பாடத்திட்டம் மிகக்; கடினமாகக் காணப்படுவதுடன், அதையும் திருத்தி அமைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இவற்றை நாங்கள் திருத்தி அமைக்காவிட்டால், இனிமேல் என்றுமே அவற்றைத் திருத்தி அமைக்க முடியாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .