2025 மே 08, வியாழக்கிழமை

'பதவிகள் தனியொரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்பமல்ல'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கை அரசியலில் புத்துயிர் பெறும் ஜனநாயக மரபும் எமது அரசியல் கட்சிகளுக்கிடையேயான பரஸ்பர புரிதலும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் மீது கொண்ட நம்பிக்கையுமே எதிர்கட்சித் தலைவர் பதவியும் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பதற்கு காரணமே ஒழிய, தனியொரு கட்சியினதோ அல்லது  தனியொரு தலைவரினதோ மனவிருப்பமல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

இது  தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தமை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குழுக்களின் பிரதித் தலைவர் கிடைத்தமை தொடர்பாகவும் அண்மைய நாட்களில் வருகின்ற செய்திகள், விமர்சனங்கள், வலைப்பதிவுகள் யாவற்றையும் நோக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட சதிவலை என்பது போலவும் பேரினவாதக்கட்சிகள் இட்ட பிச்சை என்பதுபோலவும், ஏதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்துவிட்டது போலவும் தனது அடிப்படைக் கொள்கைளில் இருந்து விலகியது போலவும் விமர்சிக்கின்றார்கள், கருத்து தெரிவிக்கின்றார்கள்.

அவரவர் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப இந்த நியமனங்களை நோக்குகின்றனர். இது அவர்களது சுதந்திரம். ஆனால் எமது கற்றுக்குட்டி மாகாணசபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இதனையொத்த கருத்துக்களை கூறுவதுதான் இன்றைய அரசியல் நகைச்சுவையாக உள்ளது.

இரு பேரினவாதக் கட்சிகளும் எமது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை உள்ளங்கையில் வைத்திருப்பதாகவும் இதன் ஒருபடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கியது என்ற சாரப்பட எம்மவர் ஒருவர் மேடையில் துள்ளிக் குதித்தமையை அண்மையில் கண்ணுற்றேன். இவர்கள் எம்மக்களிடம் என்ன கூறுகின்றார்கள் என்பதை புரிந்துதான் கூறுகின்றார்களா மாறாக வரவேற்புப்போதை மயக்கத்தில் உளறுகிறார்களோ என ஐயுறுகிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயக மரபு சார்ந்தது. அரசாங்கக் கட்சிக்கு அடுத்த பெரும்பான்மை உறுப்பினர் கொண்ட கட்சி நாடாளுமன்ற ஜனநாயக மரபின்படி எதிர்கட்சியாகும். அதன் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் ஆவார். அந்த வகையில் 2015 பொதுத்தேர்தலில் முதலிரு பெரும்பான்மைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியும் (நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி) பொதுஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலமையில் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியானமையும் அதன் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் ஆனமையும் ஜனநாயக மரபுகளின் பாற்பட்டதே ஒழிய மைத்திரி – ரணில் மனவிருப்பத்தின் பாற்பட்டதோ அல்லது பேரினவாதிகள் மனமுவந்து இட்ட பிச்சையோ அல்ல என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். இது சதிவலையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தோண்டிய குழியோ அல்ல. இத்தகு பெருமை எம்மவர்பெற முழுக்காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வட, கிழக்கு மக்களேயாகும்.
 
நியாயமாக எதிர்கட்சித் தலைவர் பதவி ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கவேண்டும். ஆனால் அப்போது இலங்கையின் ஜனநாயகம் தளம்பல் நிலையில் இருந்தமையும் அப்போதைய சபாநாயகர் உறுதியான முடிவை எடுக்க தவறியமையுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு கிடைக்காமைக்கான காரணமாகும்.
 
இவ்வாறே குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி செல்வம் அடைக்கலநாதனுக்கு கிடைத்தமை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து விட்டதாக செய்யப்படும் விமர்சனங்களையும் நாம் நோக்க வேண்டும். பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களின்படி சபாநாயகர் பதவி, பிரதி சபாநாயகர் பதவி, குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி என்பன அரசாங்க கட்சிக்கே உரித்தான பதவிகள் அல்ல மாறாக நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களது நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்படுவதாகும்.

சுதந்திர இலங்கையில் சபாநாயகர் பதவி, பிரதி சபாநாயகர் பதவிகளில் கூட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமைக்கு வரலாறு உண்டு. இதற்காக அவர்கள் அரசாங்க கட்சியுடன் இணைந்ததாக கருதுவதில்லை. இலங்கை நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மரபினை நன்கு அறிந்தவர்களுக்கு இவை புரியும், இதனை ஏற்றுக்கொள்வார்கள.; மற்றவர்கள் இவ்வாறுதான் கோமாளிகளாக குதிப்பார்கள். அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் புத்துயிர் பெறும் ஜனநாயக மரபும் எமது அரசியல் கட்சிகளுக்கிடையேயான பரஸ்பர புரிதலும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் மீது கொண்ட நம்பிக்கையுமே எதிர்கட்சித் தலைவர் பதவியும் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பதற்கு காரணமே ஒழிய தனியொரு கட்சியினதோ, தனியொரு தலைவரினதோ மனவிருப்பமல்ல என்பதை எமது நடுநிலை சாராத விமர்சகர்களும் எமது கற்றுக்குட்டிகளும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X