2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'யுத்தம் காரணமாக நம்பிக்கையை இழந்தமை பாரிய இழப்பாகும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்     

கடந்த 30 வருடகால யுத்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார அழிவுகளை விட நம்பிக்கையை இழந்தமை பாரிய இழப்பாகுமென தேசிய சமாதானப் பேரவையின் வளவாளர், முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா தெரிவித்தார்.

நிலைமாற்று நீதிக்கான பொறிமுறைகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் தொடங்கிய இனவாத நெருக்கடி 1983இல் இடம்பெற்ற ஜுலைக் கலவரத்துடன் விஸ்வரூபம் எடுத்தது. அந்த இழப்புகளுடன் நிம்மதியாக வாழலாமென்று சிறுபான்மையினத்தவர்களுக்கு இருந்த நம்பிக்கையும் இழந்துபோனது.

கடந்த யுத்தம் காரணமாக உயிரிழப்பைத் தவிர அனைத்தையும் ஈடுசெய்ய முடியுமென்று சாக்குப்போக்குக் கூறினாலும் கூட, யுத்தத்தால் இழந்த நம்பிக்கை பாரிய இழப்பாகும். இதனை ஈடுசெய்வதற்கு இனி எல்லோரும் இணைந்து ஏதாவது வழிசெய்தாக வேண்டும்' என்றார்.

'ஆயுத யுத்தம் மனித குலத்துக்கு எதிரானது. குலகம் வேண்டாமென்பதே நல்லவர்களின் நவீன சிந்தனைப் போக்கு. இதையே இலங்கையர்களாகிய நாம் கைக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் இந்த நாட்டில் கோலோச்சிய அரசியல் அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி ஆகியவையே காரணமென்பதை வரலாறு சொல்கிறது. எவ்வாறாயினும், ஆயுத முரண்பாடு முடிவுக்கு வரவேண்டுமென்ற சிந்தனை வலுத்ததாலேயே இந்தியா, சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவர உதவியது.
கடந்த காலத்தை மறக்க முடியாது. இலங்கையில்  இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அதன் மூலமாக பரஸ்பரப் புரிந்துணர்வுடன், இனப்பிரச்சினைக்கும் இழப்புகளுக்கும் பரிகாரம் காணப்பட வேண்டும். நிரந்தர சமாதானத்துக்கும் அதுவே வழியாகும். சிறுபான்மையினர் ஒற்றுமைப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X