2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'வறுமை என்பது பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது'

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'கிழக்கு மாகாணத்தில் வறுமை என்பது பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனை மாற்றி அமைப்பதே எனது சவாலாகவும் உள்ளது. இதற்காக பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கி வருகின்றேன்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் வீதத்தினை முற்றாக நிறுத்துவதற்கும், மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையினையும்  மாற்றியமைப்பதுடன்;  வருங்காலங்களில்  கிழக்கு மாகாணம் முன்னேற்றமடைந்த மாகாணமாக மாறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஹில்மி அஹமட் லெப்பை தலைமையில் வியாழக்கிழமை (24) ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவ மாணவியர்களுக்கான பாடசாலை புத்தகப்பை வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அம்மாணவர்களுக்கான பாடசாலைப் பைகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரிய முதலீட்டாளர்களை இக்கிழக்கு மாகாணத்தில்  முதலீடுகளை மேற்கொள்ள வைப்பதற்காக முதலீட்டு மாநாடு ஒன்றினை ஜனவரி மாதம் 28ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில்  ஏற்பாடு செய்துள்ளேன்.

இதில், ஜனாதிபதி, பிரதமர், பல அமைச்சர்கள் மற்றும் 500க்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களும்  பங்கு கொள்ள உள்ளனர். எனவே இதன் மூலம் அடுத்த ஆண்டில் கிழக்கின் அபிவிருத்தியில் பாரிய திருப்பு முனையை பெற்று வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன்.

இதன்  மூலம் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்குமாக  கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்  யுவதிகளுக்கான  வேலைவாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்து வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமென முதலமைச்சர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X