Super User / 2012 பெப்ரவரி 08 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரிலோஹித்)
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடந்த தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமாக பதில் கிடைக்கவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன் மேலும் கூறியதாவது:
'இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை, வடகிழக்கு பிரித்துவைத்துள்ளது என பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றினை மக்கள் நம்பக்கூடாது. அண்மைக்காலமாக பெரும் புரளியொன்று உலாவருகின்றது, வடக்கு கிழக்கு இணைப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையப் போகின்றார்' என பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன.
அரசியல் ரீதியாக சிந்திக்கும் நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும். நான் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இந்த ஆண்டில் முதலாம் திகதி முதல் கடிதமாக கையெழுத்திட்டு அந்த கடிதத்தை எழுதியிருந்தேன்.
அந்த கடிதத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த ஏனைய அதிகார பகிர்வு தொடர்பில் உங்களோடு கலந்துரையாட தயாராக இருக்கின்றேன். குறிப்பாக பலவீனப்பட்டுள்ள சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மாகாணசபை அதிகாரம் தொடர்பிலும் உங்களுடன் கலந்துரையாடவும் உங்களுக்கு உதவிபுரிவேன் என சொல்லியிருந்தேன்.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கு மாகாணசபையை ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கு மக்களை மதிக்கவில்லை. என்னிடம் கூட பேசவில்லையென்ற கவலையைக்கூட சொல்லியிருந்தேன்.
அவர்கள் அந்த கடிதத்தை எவ்வாறு எடுத்துக்கொண்டார்கள் என்று புரியவில்லை. அந்த கடிதத்தை மதித்து உடனடியாக பதிலளிக்கவில்லையென்ற கவலை எங்களிடம் இருக்கின்றது. இதை நான் ஏன ;கூறுகின்றேன் என்றால் எங்களின் மக்களிடம் கடந்த காலத்தில் ஒரு கவலையிருந்தது ஏன் நாங்கள் அவர்களுடன் பேசிப்பார்த்தால் என்ன என்று. நாங்கள் தொலைபேசியில் பேசிப்பார்த்தோம் நேரில் பேசிப் பார்த்தோம் எந்தவிதமான பதிலும் இல்லை.
கடிதம் எழுதிப்பார்த்தோம், ஒரு மாதத்தை தாண்டியுள்ளபோதிலும் எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து இவர்களுடன் தொங்கிக்கொண்டிருக்க முடியாது.
நேற்று நாடாளுளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அவர்கள் பிரதேசவாதம் பேசுபவர்கள் அவர்களுடன் பேசமுடியாது என்று. சம்பந்தன் ஐயா பேசலாம் என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அரியநேத்திரன் ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார்.
எவ்வாறு இருந்தாலும் அவர்களிடம் இருந்து ஆக்கபூர்வமான உத்தியோகபூர்வமான பதில் கிடைத்த பின்னரே மேற்கொண்டு எங்களால் நடவடிக்கையெடுக்க முடியும்.
எது எப்படியிருந்தாலும் நாங்கள் கூறும் ஒரு விடயம் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது பேசுவதால் எதுவித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. அதனை பேசவேண்டிய தேவையும் தற்போது இல்லை.
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் எமக்கு என்ன நன்மை? அவர்கள் சொல்வதுபோல அதிகாரப்பகிர்வுதான் மக்களுக்கு தேவையென்றால் எங்களைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் பிரிந்திருப்பதானது ஒரு அதிகாரப்பகிர்வு முறைமையாகவே உள்ளது.
கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என்னை வேடுவ இனத்தை சேர்ந்தவன் என தெரிவித்துள்ளார். நான் அவ்வாறு இருந்தால் அது குறித்து பெருமைப்படுகின்றேன். அவர்;களின் கட்சியும் சொல்லும் விடயம் நாங்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் என்று. இங்கு ஆதிக்குடிகள் என்பவர்கள் வேடுவப்பரம்பரையினர். அதில் இருந்து வந்தவன் என்றால், இந்த இனத்தின் சொந்தக்காரன் நான். இந்த இனம் தொடர்பில் சிந்திப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் துணிவுள்ள ஒரு தகைமையுள்ள மனிதனாக நான் இருக்கின்றேன் என்பதில் பெருமையடைகின்றேன்.
எனவே, தேவையற்ற விடயங்களை பேசுவதை விடுத்து மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசும்போது நாங்களும் பேச முன்வருவோம். அதனைவிடுத்து நாங்கள் பலவீனப்பட்டுள்ளோம். வாக்கு பெறுவதற்காக நாங்கள் பேசவருகின்றோம் என்ற சாக்குப்போக்குகளை தள்ளிவிட்டு ஆக்கபூர்வமாக சிந்திக்கவேண்டும்.
1989 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளியவாய்க்கால் உட்பட இங்கு நடந்த சம்பவங்கள் பலவற்றை நிறுத்தியிருக்கலாம். இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொள்ளப்பட்டுள்ள, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்று அதிகார பகிர்வுபற்றி பேசுகின்றனர்.
எனவே காலம் கடந்த ஞானம் வந்திருக்கின்றது என்று கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள்தான் திரும்பிப்பார்க்க வேண்டும். எங்களுக்கு அவ்வாறு இல்லை. நாங்கள் யாருக்கும் துரோகியல்ல.
மட்டக்களப்பு கிழக்கு மாகாண மக்கள் நாங்கள் துரோகியென்று நினைக்க முடியாது. உங்களுக்காக தொடர்ந்து செயற்படுவோம். வடக்கு கிழக்கு இணைப்பினால் நட்டப்படப்போவது கிழக்கு மக்கள் தான். கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் வாழ்கின்றார்கள். வடக்கு கிழக்கோடு சேர்த்து பெரும்பான்னை தமிழர்கள் என்றால் கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் சேர்ந்தால் கிழக்கு மாகாணத்தை நாம் எவ்வாறு சொந்தமாக மாற்றுவது?
எங்களுக்கு இப்போது தான் ஓரளவு நன்மைகள் வரத் தொடங்கியுள்ளது. அபிவிருத்திப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மாறிவரும் உலகில் கல்வியறிவு கணணியறிவு அற்ற பிள்ளைகள் எதிர்காலத்தில் கஷ்டங்களை எதிர்நோக்குவர். உலகமயமாதல் எல்லாவிடயங்களிலும் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியோடு நாடு கட்டியெழுப்பப்படும்போது நாங்கள் அதில் கவனம் செலுத்தாது இருந்தால் பலமிழந்து விடுவோம். மக்கள் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.
வடக்கோடு கிழக்கு இணைக்கப்படும்போது ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்வதற்கான திட்டங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. எங்களுக்கு சிறுபான்மை மக்களின் அதிகாரப் பகிர்வில் நலிவடைந்த மக்களின் அரசியல் பிரச்சனைகளை கதைப்பதற்கு உரிமையுள்ளது.
எங்கள் மாகாணத்தை பாதுகாத்து பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பி உச்சப் பயனை அடைவது எங்கள் பொறுப்பாகும். வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணம் பிரமாண்டமான வளங்களை கொண்ட மாகாணமாகும்.'
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
ICC Thursday, 09 February 2012 10:07 AM
தபால் திணைக்கள வேலை நிறுத்தம் காரணமாக இருக்கலாம்
பொறுத்து இருங்கள் வரும்.
Reply : 0 0
ummpa Thursday, 09 February 2012 02:20 PM
நமக்குள் எத்தனை தாழ்வு சிக்கல்கள். நான் , நீ என்ற அகங்காரம் . இது முதல் களையப்படவேண்டும். அப்போதுதான் வடக்கு கிழக்கு சந்தோசமாக இருக்கும். ஒற்றுமைபடுங்கள் உலகம் சுருங்கிவிட்டது. நமது வாழ்வும் அப்படித்தான். இன்னும் 50 வருடத்தை கடத்தாமல் இருந்தால் சரிதான். இந்தவருடத்தின் 41 நாட்கள் கடந்துவிட்டது .......?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago