2026 மே 09, சனிக்கிழமை

dd

இலங்கையின் பலமான மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்க முடியும்: அமைச்சர் பசில் ராஜபக்ஷ

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

இலங்கையின் பலம் வாய்ந்ததொரு மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்க முடியுமென்பதுடன்,  எந்தவொரு மாகாணத்துடனும் இணைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. அத்துடன் வேறு மாகாணத்தின் கீழும் போகத் தேவையில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சன்ட மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 27 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிக்கட்டிடத்தினை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'192 வருடகாலம் பழமை வாய்ந்த இப்பாடசாலையின் வரலாறு, கல்விச் செயற்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து நான் பெருமைப்படுகின்றேன். இப்பாடசாலையில் தற்பொழுது 3 ஆய்வுகூடங்களும் 5 புதிய வகுப்பறைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியை கல்வி அபிவிருத்திக்காகவும் பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்த வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.

வரலாறு என்பதனை விடவும் எந்தவொரு நிறுவனமும் தனது காலத்தில் பல வருடங்களைக் கடந்திருந்தாலும் அபிவிருத்திகளைக் கண்டிருப்பதில்லை. அதிலும் சிறப்பான வளர்ச்சிகளைக் கண்டுகொள்வதென்பது சிரமமான விடயமாகும். இந்த நிலையில் இருப்பதற்கு தரத்தினையும் உயர்த்தவேண்டியது அவசியமாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் இதயமாக இருக்கின்றது. இலங்கையிலுள்ள நதிகளில் மூன்றிலொரு பங்கு நதிகள் கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன.  இலங்கையில் மட்டுமல்ல உலகின் மிக நீளமான கடற்கரை இங்குள்ளது. இலங்கையில் முதற்தர நிலையில் உங்கள் விவசாயம்  உள்ளது. முழு இலங்கையின் 25 சதவீதத்திற்கும் மேலான நெல்லுற்பத்தி இங்கிருந்தே கிடைக்கின்றது.

இலங்கையின் பலம் வாய்ந்ததொரு மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்க முடியுமென்பதுடன், எந்தவொரு மாகாணத்துடனும் இணைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. அத்துடன் வேறு மாகாணத்தின் கீழும் போகத் தேவையில்லை. எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது.

எமது நாட்டினதும் மாகாணத்தினதும் எதிர்காலத்திற்கு தேவையாக இருப்பது இப்பாடசாலையைப் போன்ற பாடசாலைகளும் கல்வி கற்ற சமூகமுமே.

உங்கள் மக்களுக்கு ஒரு வருடத்திற்கு உணவூட்ட வேண்டுமெனில் நெல்லை பயிரிடுங்கள். உங்கள் மக்களுக்கு பத்து வருடங்களுக்கு உணவூட்ட  வேண்டுமெனில் அதனை வளப்படுத்துங்கள். உங்கள் மக்களுக்கு 100 வருடங்களுக்கு உணவூட்ட  வேண்டுமெனில் கல்வியை வழங்குங்களென்று ஒரு நாட்டின் தலைவர் கூறியிருக்கிறார். அந்த வாக்கியத்தை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .