2026 மே 09, சனிக்கிழமை

ஆரையம்பதி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 04 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் சந்தேக நபர்கள் 4 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்யப்பட்ட இந்த 4 பேரும் கடந்த வியாழக்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவர்களை 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம்.அப்துல்லா உத்தரவிட்டார்.

அத்துடன், இவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் தேடி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.என்.ரகீம் தெரிவித்தார்.
 
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஆயுதமுனையில் தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் ஒருவரும்  காத்தான்குடியைச் சேர்ந்த  மூவரும்  கடந்த வியாழக்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.  இராணுவ வீரர் பயன்படுத்திய ரி - 56ரக துப்பாக்கி ஒன்று புதுக்குடியிருப்பு இராணுவ முகாமிலிருந்து மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்கநகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .