2026 மே 09, சனிக்கிழமை

dd

மறிப்பு அமைத்து இறால் பிடிப்போரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 04 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு வாவிக்கரை (அமிர்தகழி, சீலாமுனை) பிரதேசத்தில் மறிப்பு அமைத்து இறால் பிடிக்கும் சங்கத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று  அமிர்தகழி கண்ணகையம்மன் ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 5 மாதங்களாக மறிப்பு அமைத்து (கொட்டு) தொழிலில் ஈடுபடுபவர்கள் தொழிலைச் செய்யமுடியாமையால் பல்வேறு சிரமங்களை தாம் அனுபவித்து வருவதாகவும் இது தொடர்பில் அரசாங்க அதிபர், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட் உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்த விடயம் குறித்து சாதகமான முடிவினைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய முறையில் செய்யப்பட்டுவரும் கொட்டு (மறிப்பு) அமைத்து இறால் பிடிக்கும் தொழில் சுனாமி, வெள்ளப்பெருக்கு,  வன்செயல்களினால் பாதிக்கப்பட்டது. மேலும் பகுதி நேரமாக மீன்பிடியில் ஈடுபடுபவர்களால் தமது கொட்டு அமைத்து இறால் பிடிக்கும் தொழிலுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கொட்டு அமைத்து இறால் பிடிப்பவர்கள் தெரிவித்தனர்.
 
மறிப்பு அமைத்து இறால் பிடிக்கும் சங்கத்தின் தலைவர் சின்னையா பாக்கியராசா, செயலாளர் சீனித்தம்பி பாலசுந்தரம், உபதலைவர் சின்னக்குட்டி தங்கராசா, நிர்வாக உறுப்பினர் தம்பிராசா செல்லத்தம்பி, பொருளாளர் சின்னத்தம்பி சிவக்கொழுந்து ஆகியோருடன் இச்சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .