2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஜனநாயகப் போராளிகள் முடியுமானால் மட்டக்களப்பில் பிரசாரங்களை மேற்கொள்ளட்டும்: ரி.எம்.வி.பி. சவால்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

அறிக்கை விடும் ஜனநாயகப் போராளிகள் முடியுமாகவிருந்தால் மட்டக்களப்புக்கு வந்து தமது பிரசாரங்களை மேற்கொள்ளட்டும். அவ்வாறானவர்களை மக்களே விரட்டியடிப்பார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை செங்கலடியில் நடைபெற்ற கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அண்மையில் கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் வவுனியாவில் உள்ள ஜனநாயகப் போராளிகள் வருவார்கள் என்ற செய்தி ஒன்றைப்பார்த்தேன். பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றன. அந்த வகையில் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறான நிலையில் வவுனியா பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் போன்ற சிலர் அறிக்கைகளை விடுபவர்களாக மாறியிருக்கிறார்கள்.

முடியுமாகவிருந்தால் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகைதரட்டும். வெள்ளத்தால் நாங்கள் கஷ்டப்பட்டோம், எல்லைக்கிராமங்களில் நமது மக்களைப் பாதுகாக்கப் பாடுபட்டோம், தமிழர்களின் காணிகளில் பள்ளிவாசல்கள் அமைக்கப்படும்போது அதனை எதிர்த்து நிற்கிறோம். இதுபோன்ற வேளைகளில் எல்லாம் வராத ஜனநாயகப்; போராளிகள் தேர்தல் வருகிறது என்றவுடன் மாத்திரம் வருகிறார்கள். இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

எவ்வளவு இரத்தத்தைச் சிந்தினோம். எவ்வளவு இன்னல்களைச்சந்தித்தோம். ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் வருகை தருகிறார்களாம். நாங்கள் மக்கள் போராளிகள். முடியுமாகவிருந்தால் எங்களது மண்ணில் கால் வைத்துப்பார்க்கட்டும். அவ்வாறு யாராவது வருவார்களாக இருந்தால் மக்களே விரட்டியடிப்பார்கள்.

இந்நிகழ்வில், கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின்  முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா கலந்து கொண்டனர்.

  Comments - 0

  • Iya Sunday, 01 July 2012 09:42 AM

    தேர்தலுக்கு முன்பே உங்களுடைய அச்சுறுத்தல்கள், அராஜங்களை தொடங்கி விட்டீர்கள். ஜனநாயகம் என்றால் முதலில் என்னெவென்று புரிந்து கொள்ளுங்கள். இந்நாட்டிலுள்ள குடிமகன் எங்கு சென்றும் தனது கருத்தை தெரிவிக்கும் உரிமையுண்டு. அந்தவகையிலேயே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
    - மண்ணின் மைந்தர்கள்.

    Reply : 0       0

    Rajan Tuesday, 03 July 2012 02:29 PM

    தேர்தல் வரும் போது விழித்து கொள்ளும் ஜனநாயக போராளிகளே மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது ஏன் கண்ணை மூடிக்கொண்டீர்கள். மோகனின் கருத்து சரியானதுதான்.
    - தமிழின் மகன்-

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .