
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளீர்க்கப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் நேற்று முன்தினம் தமது பயிற்சியை முடித்து வெளியேறினர்.
கிரித்தல மற்றும் மின்னேரியா ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற இந்த பட்டதாரிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டார்.
நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி அதிகாரிகளாக கடமை புரிவதற்காக பொருளதார அபிவிருத்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள 15.596 பட்டதாரிகளில் மூன்றாவது குழுவினர் இதன்போது பயிற்சியை முடித்து வெளியேறினர்.
இந்த பட்டதாரிகளை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு இலங்கையிலுள்ள 16 நிலையங்களில் இப்பயிற்சி நெறி இடம் பெற்றுவருகின்றது.
மஹிந்த சிந்தனையின் தூர நோக்கில் குறிப்பிடப்பட்டவாறு கிராமிய பொருளாதாரத்தை வளப்படுத்தி நாட்டில் வறுமை ஒழிக்க இந்த பட்டதாரிகள் முன் வரவேண்டுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இதன் போது தெரிவித்தார்.