-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியில் வைத்து கைதான 10 சந்தேக நபர்களையும் இன்று எச்சரித்து சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாராக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கடந்த புதன்கிழமையன்று காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையின் கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று இந்த சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியில் வைத்து கைதான 10 சந்தேக நபர்களும் மற்றும் அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளருமாக 11போர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி இவர்களை எச்சரித்து சரீரப்பிணையில் விடுதலை செய்ததுடன் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் யாழ்ப்பானம், கரவெட்டி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் வீட்டுரிமையாளர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.