2025 மே 03, சனிக்கிழமை

கெவிளியாமடு பிரச்சனை தொடர்பில் மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவிளியாமடு பகுதி காணி பிரச்சனை தொடர்பாகவும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் இடமாற்றத்தை தடுத்து நிறுத்துமாரி கோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று புதன்கிழமை (12) கையளிக்கப்பட்டது.

அம் மகஜரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், கி.துiராசசிங்கம், மா.நடராசா, கோ.கருணாகரன், ஞா.கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் கையொப்பமிட்டு வழங்கியுள்ளனர்.

அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது!

'கடந்த 2014.3.4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

அதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கெவிளியாமடு பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு அனுமதிப் பத்திரமும், வீட்டுத் திட்டமும், வதிவிடச் சான்றிதழும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பிரதேச செயலளரான திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் என்பவரை இடமாற்றம் செய்வதாகவும் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது உண்மையாயின் நாங்கள் கவலையடைவதுடன், எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்துவதுடன், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளரை காரணமின்றி முறைகேடாக இடமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்'  என அதில்; குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X