2025 மே 12, திங்கட்கிழமை

ஐரோப்பிய ஒன்றிய நிதியை சரியாக பயன்படுத்தவும்: சீ.யோகேஸ்வரன் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தால் அபிவிருத்தி செயற்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியை சரியாக கையாள நடவடிக்கை எடுக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐரோப்பிய ஒன்றியம் பல கோடிக்கான நிதியை மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் பாதிக்கப்படாத தங்களது பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த எடுத்துள்ள திட்டமானது மிக வேதனையளிக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியே யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்த பிரதேசமே அபிவிருத்திக்காக முக்கியமாக தெரிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், சனத்தொகை அடிப்படையில் நிதியை பங்கீடு செய்து எதுவித பாதிப்புமற்ற பிரதேங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது.

இவ்விடயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டுவந்து எதுவித அரசியல் தடையுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உதவி சென்றடைய வழி செய்யவுள்ளோம்.

இருப்பினும், எமது மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த ஒரு அரச உயரதிகாரி என்ற வகையில் இவ்விடயத்தில் தலையிட்டு மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு இந்த உதவிகள் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றேன். இது தொடர்பில் பதிலை எதிர்பார்க்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள், பொது நிர்வாக அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலக திட்டப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X