2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஊடகத்துறையை தாயை நேசிப்பது போன்று நேசிக்கின்றேன்: கோபாலரெத்தினம்

Gavitha   / 2014 நவம்பர் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

ஊடகத்துறை புனிதமானது. எனது தாயை நேசிப்பது போல் ஊடகத்துறையை நேசிக்கின்றேன். காரணம் ஊடகவியலாளர்கள் பிரதேசங்களின் அபிவிருத்தி, மக்களின் அபிலாசைகள் போன்ற பல விடயங்களை உண்மையாகவும் நேர்மைத் தன்மையுடனும் வெளியிட்டுக் கொண்டிருகின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவிதுள்ளார்.

கிழக்கிலங்கை இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் இன்று (02) களுவாஞ்சிகுடி சைவமகா சபை கட்டடத்தில், அதன் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவரஜாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுக்கு வழங்கும் பல விடயங்களை ஊடகத்துறையின் வாயிலாக மக்களுக்கு வெளிக்கொண்டுவர வேண்டும். ஊடகத்துறை மென்மேலும் வளரவேண்டும் ஊடகவியலாளர்கள் பாராட்டப்பட வேண்டும். இவைகள் அனைத்துக்கும் பிரதேச செயலாளர் என்ற வகையில் எனது சகல ஒத்துழைப்புக்களையும் என்னால் வழங்க முடியும்.

ஊடகவியலாளர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அணுகி செய்திகளைப் பெறும் போது, மக்களின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
களுவாஞ்சிகுடிப் பிரதேசம் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசதம். இந்தப் பிரதேசத்தில் மறைமுகமான நோய் ஒன்று தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அவை என்னவெனில், இளவயது திருமணம், சட்டவிரேத கருக்கலைப்பு, நஞ்சருந்துதல், தூக்கில் தொங்குவது போன்ற குடும்பப்பாங்கான பிரச்சனைகள் இப்பிரதேசத்தில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.

தற்போதைய காலச் சூழ்நிலை மாறிக்கொண்டு வருகின்ற இந்நிலையில், மக்கள் ஏன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, மக்களுக்கு இவை சம்மந்தப்பட்ட விழிப்புணர்வுகள் தேவையாகவுள்ளது. எனவே, ஊடகவியலாளர்கள் இவை சம்மந்தப்பட்ட விடயங்களில் மிகவும் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு செய்திகளை வெளியிட வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பெறுப்புடன் கடமை புரிந்து வந்தேன். ஆனால் பல சவால்களையும் அங்கு எதிர்கொண்டு கடமை புரிந்தேன். இன்னும் நான் அம்பாறை மாவட்டத்தில் கடமை செய்திருந்தேன் என்றால், எனது உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். அதன் பின்னர் தான் நான் மட்டக்களப்புக்கு வந்து களுவாஞ்சிகுடி பிரதேச மக்களுக்காக சேவை செய்து வருகின்றேன். எனவே எனது ஒத்துழைப்புக்கள் என்றென்றும் ஊடகத்துறைக்கு இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X