
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
குற்றங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சிறந்தமுறையில் கொண்டுசெல்லும் வகையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றது.
பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் இந்துகருணாரட்ன ஆகியோரின் ஆலோசனையுடன் இது தொடர்பான செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்போது, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், குற்றங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சிறந்தமுறையில் கொண்டுசெல்லும் வகையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும்; கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தி குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இவ்வாறான கலந்துiராயடல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜயசிங்க தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜயசிங்க, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம், களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ரட்னாயக்க உட்பட களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.