2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சர்வதேச விசாரணையாளர்களிடம் வடக்கு கிழக்கில் பலர் சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர்: அரியநேத்திரன்

Sudharshini   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கடந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களுக்கு விதித்திருந்த தடையினை நீக்கி நேரடியாக சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வருவார்களானால் வடக்கு கிழக்கில் பலர் நேரடியாக சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கறுவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இந்த ஆட்சி மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணசபையில் எஞ்சியிருக்கும் இரண்டரை வருடங்களில் அமையவுள்ள ஆட்சியில் இணைந்து செயற்படுவதுக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகித்து பின்தங்கிய பகுதிகளில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

கிழக்கு மாகாண மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்கள் தொடர்பில் பற்று உறுதியுள்ள அரசியல் தலைமையினை கட்டியெழுப்பக்கூடியவர்களாக நாங்கள் மாறுவோமாக இருந்தால் நாங்களும் பல மாற்றங்களைச்செய்யமுடியம்.

இந்த அரசாங்கத்தில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி 100 நாட்கள் வேலைத்திட்டம் ஒன்றை தனது செயற்றிட்டமாக முன்னெடுத்துள்ளார். அந்த நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்று 58 நாட்களே இந்த ஆட்சியை கொண்டு இழுப்பதற்கான சூழ்நிலையிருக்கின்றது.

அதற்கிடையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் சீர்திருத்தத்தினை கொண்டுவருவதாக கூறியிருக்கின்றார். அரசியல் அமைப்பு மாற்றத்தினை முன்வைப்பதாக கூறியிருக்கின்றார். அவ்வாறான அரசியல் அமைப்பு மாற்றம் வருமாக இருந்தால் இலங்கையில் இருக்ககூடிய அனைத்து சிறுபான்மை மக்களினதும் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தக்கூடியவாறு, அவர்களின் தனித்துவத்தினை பாதுகாக்ககூடியவாறு இருக்கவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

இன்று சமாதானம், ஆட்சிமாற்றம் அனைத்தும் தற்போது கிடைத்துவிட்டது என சிலர் கருதுகின்றனர். காணாமல் போனவர்வகள் தொடர்பில் மட்டக்களப்பிலேயே மூன்றுக்கு மேற்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் நடைபெறுகின்றன.

ஆனால் எந்தவித சிறையும் இல்லாமல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயவின் தடுப்பு முகாம் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதில் 700 தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூட கூறுகின்றார்கள். அதன் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டிய பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உள்ளது. இதனை அவர்கள் ஒரு வதந்தியாகவோ, செய்தியாகவோ விட்டுவிடமுடியாது.

கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வெள்ளை வான்களில் கடத்தியவர்களின் பெயர்களை மக்கள் கூறுகின்றனர். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆணைக்குழுக்களை அமைத்து அதன் பரிந்துரைகளின் கீழ் மரணச்சான்றுகளை வழங்குவதான வாக்குறுதியை அளித்தார்களானால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையே கேட்கின்றோம். யார் கடத்தினார்களோ அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த விசாரணை மூலமாக கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

அந்த தண்டனையென்பது உள்ளூர் விசாரணை மூலம் வழங்கப்படும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது சர்வதேச ரீதியான விசாரணையாக உருவாகியுள்ள ஐ.நா.வின் விசாரணை ஊடாக இந்த மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

அதனை இந்த அரசாங்கம் செய்யத்தவறுமாகவிருந்தால் தமிழ் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆறுமாத நீடிப்பினைக்கேட்ட அரசாங்கம் மேற்படி விடயங்களை செய்வதுக்கு முன்வரவேண்டும் என்பதே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X