2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடாது: கியாஸ்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடாது என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ்  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (23)  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து தமிழ், முஸ்லிம் தலைமைகள் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கு ஆள் விமர்சித்து வருகின்றமை கவலை அளிக்கின்றது.  இந்த விமர்சனம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.

இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம், நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகளுங்களுக்கான தீர்வுகள், இலட்சியங்கள் எட்டப்படவுள்ள இன்றைய சூழ்நிலையில், கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மாற்ற விவகாரத்தை வைத்து முந்திக்கொண்டு ஆளுக்கு ஆள் அறிக்கைகளை விட்டு குழப்பக்கூடாது. யதார்த்தத்துக்கு மாற்றமான முறையில் மக்களிடையே முகங்களை காட்ட முனைவது முட்டாள்தனமான செயற்பாடாகும்.

இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி பெரும்பான்மை சமூகத்திலுள்ள இனவாதிகளுக்கு தீனி போடும் செயற்பாடாக இவ்வாறான செயற்படுகள் அமைந்துவிடும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியமாகும்.

கடந்தகாலங்களில் இந்த இரண்டு சமூகங்களும் பட்ட துன்பங்கள், உயிர்ச்சேதங்கள், சொத்து இழப்புக்கள் என்பவற்றை மறந்துவிடமுடியாது. இன்னும் இழப்பதற்கு எதுவும் கிடையாது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் விடயத்தில் உறுதியாக உள்ளார். ஆகவே, தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகங்களும் தமது அரசியல் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வை ஒற்றுமைப்பட்டு ஒருமித்த கருத்துடன் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையின் அடிப்படையில் செயற்படவேண்டும்' என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X