2025 மே 17, சனிக்கிழமை

வெளிச்சம் ஏற்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்கள் கைது

Thipaan   / 2015 மே 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் போது வெளிச்சம் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக்;கூறி, ஐந்து மீனவர்களை சனிக்கிழமை (23)  கைது செய்த கடற்படையினர், அவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் அம் மீனவர்களின் இரண்டு படகுகளையும் அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களையும் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் சிறிய படகுகளில் ஜனரேட்டர்களை பாவித்து வெளிச்சம் ஏற்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அறிவித்த கடற்றொழில் திணைக்களம், மின்கலங்கள் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

அதற்கிணங்க மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த போதே, அவர்களை கைது செய்த கடற்படையினர், அவர்களை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

படகுகளையும் உபகரணங்களையும் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கவுள்ளதாக கடற்றொழில் பரிசோதகர் எம்.எல்.எம்.முர்ஜிஸ் தெரிவித்தார்.

இம் மீனவர்களது பிரச்சினை தொடர்பில், மீனவர்களுக்கும் மட்டக்களபபு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளருக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்டக் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடலில் மீன்பிடியில் ஈடுபடும் போது வெளிச்சம் இல்லாமல் இருப்பது எங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
நாங்கள் வெளிச்சம் இல்லாமல் இருக்கும் போது பெரிய கப்பல்கள் மூலம் நாங்கள் தாக்கப்படலாம்.

வெளிச்சத்துடன் இருந்தால் பெரிய கப்பல்கள் வரும் போது வெளிச்சத்தைக் கண்டு விலகிச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே நாட்டில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் போட்டு படகுகள் தொழில் செய்யும் போது பாசிக்குடா கடற்பரப்பில் மட்டும் ஏன் தொழில் செய்யமுடியாமல் உள்ளது என்று தெரியாமல் உள்ளது.

உரிய அதிகாரிகள் இது தொடர்பாக உரிய தீர்வை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்றும் இல்லையேல் நாங்கள் வீதியில் இறங்கி தீர்வு கிடைக்கும்வரை பேராடுவோம் என்றும் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .