2025 மே 17, சனிக்கிழமை

'மெல்லக் கொல்லும் இரசாயனங்களால் நாம் நோயாளிகளாகின்றோம்'

Suganthini Ratnam   / 2015 மே 27 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'மெல்லக் கொல்லும் இரசாயனங்களால் நாம் ஒவ்வொருவரும் நடமாடும் நோயாளிகளாகி வாழ்கின்றோம்' இவ்வாறு  மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மரக்கறிப்பயிர் அறுவடை விழாவும்; முன்மாதிரித் தோட்டத் திறப்பு விழாவும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஏறாவூர், மீராகேணியில் இடம்பெற்றது.

இளம் விவசாயி கே.எம்.அஷ்ரப்பின்  (வயது 21)  தோட்டத்தில் மரக்கறிகளும் பழவகைகளும் தானியங்களும் செய்கை பண்ணப்பட்டு அறுவடை  இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அன்றாடத் தேவைக்காக சந்தையில் கொள்வனவு செய்யும் மரக்கறிகளும் காய், கனிகளும் தானியங்களும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இரசாயனங்கள் பாவித்து விளைவிக்கப்படுகின்றன. இவற்றை நாம்  பணத்துக்கு வாங்குகின்றோம். வெறுமனே நாம் அவற்றை மட்டும் வாங்கவில்லை. அவற்றோடு சேர்த்து எம்மை மெல்லக் கொல்லும் இரசாயன நஞ்சுகளையுமே விலைக்கு   வாங்குகின்றோம். அழகாக இருக்கும் மரக்கறிகள் இரசாயனம் கலந்து விளைவிக்கப்பட்ட ஆபத்தானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரசாயனப் பாவனையை உடனடியாகத் தடைசெய்ய முடியாதுபோனாலும், இரசாயனத்தை பாவித்து உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகளை நுகர்வதால் அதனால் உண்டாகும் ஆரோக்கியக்கேடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இத்தகைய விழிப்புணர்வு மக்களிடையே சிறிய அளவிலாயினும் வெற்றியளித்திருக்கின்றது என்றே கருத முடியும்.

இரசாயன விளைபொருட்களை நுகராமலிருப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறை வீட்டுத் தோட்டங்களேயாகும். ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டங்களில் கவனம் செலுத்துவார்களேயானால் சந்தைக்கு சென்று இரசாயன விவசாய உற்பத்திகளை வாங்க வேண்டிய தேவை ஏற்படாது. இதன் மூலம் எமதும் எமது எதிர்கால சந்ததியினரதும் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்ளலாம். இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது ஒரு அலாதியான சுகம் தரும் வாழ்க்கை.
இந்த நல்ல நோக்கங்களை அடைவதற்காக தொடங்கப்பட்ட 'திவிநெகும' வாழ்வின் எழுச்சித் திட்டம் அதன் நோக்கம் சரியாக இருந்தாலும் நிருவாக  முரண்பாடுகள் காரணமாக அது தோல்வியைத் தழுவியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
அதேவேளை திவிநெகும திட்டத்தின் மூலம் கிடைத்த விழிப்புணர்வை மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது. எல்லா சூழ்நிலைகளிலும் அதாவது விவசாயச் செய்கைக்கு நிலம் இல்லாதோரும் நகர்ப்புற மக்களும் வீட்டுத் தோட்டத்தில் ஈடுபட்டு நஞ்சில்லாத மரக்கறிகளை நுகர்வதற்கு இப்பொழுது பல்வேறு நுட்பங்கள் விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன' என்றார்.

மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் உதவிப் பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராஜா, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, பிரதேச விவசாயப் போதனாசிரியர்களான முர்ஷிதா ஷிரீன், ஆர்.துஷ்சந்தி, வேணி திருணவன், எம்.எஸ்.எம். சலீம், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.அல்மிஸ்ரியா பானு உட்பட அதிகாரிகளும் விவசாயிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .