2025 மே 01, வியாழக்கிழமை

‘அம்பிட்டிய தேரரின் நடவடிக்கைகளால் மட்டக்களப்புக்கு ஆபத்து’

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைவிட மோசமான நிலைமை, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் இ.விஸ்னுகாந்தன் எச்சரித்தார்.

மட்டக்களப்பிலுள்ள இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு எச்சரித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியின் பிரச்சினை பல காலமாக நடந்துவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அடாவடித்தனமான வேலைகளை அவர் செய்துகொண்டிருக்கின்றார்.  

“நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென தேரருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவருடைய அடாவடித்தனம் குறைந்ததாக இல்லை.

“கிராம சேவகரைத் தாக்குவது, மின்சாரசபை ஊழியரைத் தாக்குவது என தொடர்ந்து அரச உத்தியோகத்தர்களைத் தாக்குகின்றாரென்றால், இனிவரும் காலத்தில், சஹ்ரானைவிட பெரிய திட்டங்களை இவர் தீட்டியிருக்கலாம்..

“இந்தத் தேரரை கைதுசெய்வதற்கு, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், இவரை கைதுசெய்யப்போனால் நாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பக்கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக, அது தவிர்க்கப்பட்டது.

“இந்த நாட்டில் அட்டகாசங்கள் செய்த அனைவரும் இன்று கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, சுமனரத்ன தேரரும் இம்மாதம்  30ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றில் வைத்துக் கைதுசெய்யப்படுவார்.

“சுமனரத்ன தேரர் ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-சிங்கள மக்கள் உறவு பாரதூரமான நிலைக்குச் செல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது. இவரின் செயற்பாடு தொடர்ந்து நீடிக்குமானால், அது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.

“அதன்காரணமாக, இவரை நீதிமன்றம் ஊடாக கைதுசெய்து, இனியொருபோதும் கிழக்கு மாகாணத்தில் காலூன்றாத நிலையை ஏற்படுத்தவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .