2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உறுகாமம் மீள் குடியேற்ற குடும்பங்களுக்கு ‘வீடுகள் அமைத்து தரப்பட வேண்டும்’

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமது பூர்வீக வாழ்விடமும் வாழ்வாதாரத் தொழிலிடமுமாக இருந்து உறுகாமம் கிராம மக்களுக்கு மீள் குடியேற்றத்துக்கான வீடுகள் அமைத்துத் தரப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் வேண்டுகோள் விடுத்தார்.  

இந்த விடயம் தொடர்பாக தான் ஏற்கெனவே பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் வேண்டுகோள்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில், மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் தற்சமயம் உறுகாமம் புதூர் கிராம மக்கள் சுமார் 70 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளார்கள்.

“ஆயினும், முழுமையான அரச பங்களிப்புடனான மீள்குடியேற்றம் அங்கு இடம்பெறவில்லை.

“அங்கு குடியேறிய மக்களுக்கு உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளோ,  போதிய வீட்டு வசதிகளோ, வாழ்வாதார உதவிகளோ, இழப்பீடுகளோ எதுவுமே வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

“இந்நிலையில், அவர்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றார்கள்” எனத் தெரிவித்த அவர், “இதனை அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசியல் தலைமைகள், இன ஐக்கியத்துக்காகப் பாடுபடுவோர், மனித உரிமை அமைப்புகள் என எல்லோரும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்” எனக் கோரினார்.

“சுமார் கால் நூற்றாண்டு காலம் இவர்கள் அகதிகளாகவே தங்களது காலத்தைக் கடத்தி விட்டு தற்சமயம் அவர்கள் தாங்களாகவே மீள் குடியமர்ந்துள்ளார்கள்.

“ஆயினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் புறக்கணிக்கும் வண்ணம் நடவடிக்கைகள் இடம்பெறுவது நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல.

“வெளிப்படையான அநீதிகள் வேண்டுமென்றே இடம்பெறுவதற்கு எவரும் இடமளிக்கக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X