2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’உலகிலுள்ளவர்களை கொரோனா ஒரு கணம் சிந்திக்க வைத்துள்ளது’

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.மோகனதாஸ்

உலகமயமாக்கல் நவீன விஞ்ஞான யுகத்தில், எத்தனை கண்டுபிடிப்புகளை மனிதர்களின் அறிவாற்றலால் கண்டுபிடிக்க முடிந்தாலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, இதுவரை மனிதரால் மருந்து கண்டுபிடிக்கப்படாமை வேதனையான விடயமாகும் என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், ஆயுதங்களை மனித அழிவுக்காகக் கண்டுபிடித்து சாதனை படைக்கும் இன்றைய காலத்தில், ஒரு நோயை தீர்ப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்ற விடயம் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனூடாக, மனிதனை இறைவன் வழிநடத்துகிறான் என்ற உண்மை உணரப்படுவதாகவும் அதாவது இறைவனால் விதிக்கப்பட்ட தீர்ப்பை மனிதனால் மாற்றமுடியாது என்பதை, இந்நோய் கற்றுத்தந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இயந்திரமயமாக்கல் காலத்தில் ஓய்வின்றி உழைக்கும் மனித குலத்தை உலகம் முழுவதும் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும் கட்டளையை இறைவன் மனிதருக்கு அருளியுள்ளான் என்றும் உலகில் இன்று 200, நாடுகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து மக்களையும்  வீடுகளில்  தனிமைப்படுத்தி ஓய்வெடுக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு, இனம், மதம், குலம், சாதி எல்லாம் கடந்து பதவி, பட்டம், அந்தஷ்து பார்க்காமல் எல்லா மனிதர்களையும் சமமாக தாக்கும் இந்த கொரோனா வைரஸ் என்பது, உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒரு கணம் சிந்திக்க வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நோயில் இருந்து விடுபட வேண்டுமானால், இறை சிந்தனையை மனதில் பதித்து வீட்டில் தனித்திருந்து சுகாதார பழக்க வழக்கங்களையும் பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களையும், நோய்த் தொற்று நீக்கும் முறைகளையும் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X