2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கருத்தறியும் அமர்வில் 262 முறைப்பாடுகள்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்    

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாழைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, 262 முறைப்பாடுகள் வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலய செயலணிக் குழுவின் செயலாளர் க.காண்டீபன் தெரிவித்தார்.

இந்த அமர்வில் மயிலத்தமடு, மாதவனை கால்நடையாளர் சங்கப் பொருளாளர் சீ.நிமலன் தெரிவிக்கையில், 'மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் காடழிக்கின்றனர், கசிப்பு தயாரிக்கின்றனர். சட்டவிரோத துப்பாக்கியும் வைத்துள்ளனர்.  

1974ஆம் ஆண்டுக்;கு முன்பிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் எந்தவித குடியேற்றமோ, விகாரையோ, மேய்ச்சல் தரைக்கு இடையூறான விடயங்களோ இடம்பெறவில்லை. ஆனால், 2012ஆம் ஆண்டுக்;கு பிற்பாடு இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 2012ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளை சுட்டும், கடத்தியும் உள்ளனர்.

இவ்விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர் அனுப்பினோம். அங்கு வருகை தந்து பார்வையிட்டார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இங்கு சட்டவிரோதமான முறையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் சட்டவிரோதமாக காடழிக்கின்றனர், கசிப்பு தயாரிக்கின்றனர், சட்டவிரோத துப்பாக்கியும் வைத்துள்ளனர். துப்பாக்கியை வைத்து எங்களுடைய மாடுகளை சுட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

இவர்களை விட்டு எழுப்பினால் தான் நாங்கள் மேய்ச்சல் தரையில் மாடுகளை வளர்க்க முடியும், அரசாங்கத்துக்கு எங்களால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் லீற்றருக்கு மேல் பால் வழங்கி வருகின்றோம். அதனை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இவர்களுக்காக மகாவலி ஆற்றுக்கு அப்பால் மேய்ச்சல் தரை உள்ளது. அவர்களுடைய பிரதேசத்துக்குள்; தான் தற்போது மாடுகளுக்கான நீர் உள்ளது. எங்களை காட்டுப்பகுதியில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் எவ்வாறு வளர்க்க முடியும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள், பராமரிப்பாளர்கள் மாட்டை நம்பியே வாழ்கின்றோம். எங்களுக்கென ஒரு இடம் இருந்தால் நாங்கள் யாரிடமும் கையேந்த தேவையில்லை.

அரசாங்க அதிபர் வருகை தந்து பார்த்து இது மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய எல்லை, மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டது. சட்டவிரோத பயிர்ச்செய்கை, குடியேற்றம் என எங்களிடம் கூறி விட்டு பின்னர் இது இடைத்தரக பயிர்ச் செய்கையாளர்கள் என கூறுகின்றார். இது ஒரு அநீதியான கருத்து.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நினைத்தால் அவர்களை வெளியேற்றி எங்களுக்கு இந்த நிலத்தை பெற்றுத் தரமுடியும். இதனை பெற்றுத் தருவதால் அரசாங்கத்திற்கு எங்களால் பல நன்மைகள் உண்டு.

எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் எங்களுக்கு இந்த மேய்ச்சல் தரையை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, இதனை பெற்றுத் தந்தால் மூவின மக்களும் மேய்ச்சல் தரையை பயன்படுத்த முடியும்'; என்றார்.

இதேவேளை, மயிலத்தமடு, மாதவனை கால்நடையாளர் சங்க செயலாளர் கு.பொன்னுத்துரை தெரிவிக்கையில், 'மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களால் எங்களுடைய மாடுகள் ஆயிரத்துக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து மேய்ச்சல் தரையை பயன்படுத்தி வருகின்றோம். அதனை பெறுவதற்கே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தற்போது அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்விடயமாக இரண்டு தடவை மாவட்ட அரசாங்க அதிபரை அழைத்துக்கொண்டுவந்து காட்டினோம். மகாவலி 'வி' வலயமாக மாற்றப்பட்டுள்ளது எனவும், படத்தில் கூட எங்களுக்கு மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த நிலத்தை தான் நாங்கள் கேட்கின்றோம். அதனை பெற்றுத் தரவேண்டும் என்றுதான் நாங்கள் இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்விற்கு வருகை தந்துள்ளோம்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் கொலை செய்யப்பட்டும் பிடிக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு உள்ளாகியும் காணப்படுகின்றது. இதனால் எங்களுடைய ஜீவனோபாயம் பாதிக்கப்படுகின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு இந்த நல்லிணக்க சேவையை செய்ய முடிவில்லையாயின், இந்த அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் எங்களது கேள்வி' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X