2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

ஜனநாயகத்தை “அரசாங்கம் கொன்றுவிட்டது” - முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல்தீர்வு கிடைக்கப்பெறவேண்டும் எனும் நோக்குடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் உருவாக்கி செயற்பட்டதுதான் எமது கடந்த கால நல்லாட்சியாகும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி, அந்த ஆட்சியிலேயே நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்பிக்கப்பட்டது என்றார்.

 ஓய்வூதியக்காரர்களுக்குரிய பிரச்சனை, மேலும் பல அபிவிருத்தித்திட்டங்கள் என்பன ஏற்படுத்தப்பட்டன. துரதிஸ்டவசமாக பாராளுமன்றம் கலைத்தமையால், அவற்றை முன்கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. ஆனாலும்  அரசியலமைப்பில் அப்போது 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது என்றார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில்  செவ்வாய்கிழமை(15) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

எம்மால் உயிர்ப்பிக்கப்பட்ட ஜனாநாயகத்தை தற்போதுள்ள அரசாங்கம் மரணிக்கச் செய்துள்ளது. ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுதந்தரமற்ற நிலையில் காணப்படுகின்றன. எனவே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு கடந்த நல்லாட்சியில்தான் அடித்தளமிடப்பட்டது என்றார்.

“தற்போது 20வது சரத்தைக் கொண்டுவந்து அவைகளனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன. தற்போது அரசாங்கம் பசளையை நிறுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இலவசமாக பசளை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறினர். எனினும்,  பணம் கொடுத்துக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என்றார்.

நாட்டில் எந்தப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்குச் சென்றாலும் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. வரிசை யுகம் ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு நாட்டுமக்கள் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளார்கள் என்று தெரிவித்த அவர்,   இந்நாட்டின் சரித்திரத்திலே இல்லாத பிரச்சனைகளை தற்போது மக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.

இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ  தலைமையில் ஸ்திரமான அரசாங்கத்தை நிறுவவேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.                

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X