2025 மே 07, புதன்கிழமை

தமிழர் ஐக்கிய முன்னணியிலிருந்து அழைப்பு

கனகராசா சரவணன்   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நான்கு அமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதே, தமிழர் ஐக்கிய முன்னணி என்றும் முன்னணியில் இணைந்துகொள்ள விரும்புவோர் தாரளமாக இணைந்துகொள்ள முடியும் என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போகத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக தமிழர் ஐக்கிய முன்னணி பலமடைவதற்காகவும் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி ரி.சிவநாதனை தலைவராகக் கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம், முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கைத் தமிழர் முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனைத் தலைவராகக் கொண்ட முற்போக்குத் தமிழர் அமைப்பு, தமிழர் விடுதைக் கூட்டணி ஆகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்துகொண்டு கலந்துரையாடி,  முன்னணியை உருவாக்கியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த முன்னணியை உருவாக்குதல் தொடர்பாக, கருணா அம்மானுடன் தாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்வதாகவும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

எம்முடன் இணைய விரும்புபவர்கள், மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகளால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி, அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X