2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘தேர்தல் விடயங்களோடு ஒப்பிட்டுவது நியாயமற்றது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அப்பியாசக் கொப்பிகளைத் தேர்தலுக்காக வழங்கவில்லை. தேர்தலுக்காக மாத்திரமே பலராலும் செய்யப்படும் பல வேலைத்திட்டங்களோடு, இதை ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமற்றது” என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“அரசியல் வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக, கல்வி, அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் “வருடாந்த இலவச அப்பியாச புத்தக விநியோகம்” மிக முக்கியமானதாகும்.

“கடந்த 8 வருடங்களாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் 1,000 மணாவர்களுக்கென தொடங்கப்பட்ட இத்திட்டம், அதனுடைய முக்கியத்துவம் கருதி, 10,000க்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போது விரிவுபெற்றுள்ளது.

“வருடாந்தம் ஜனவரி மாதத்தில் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பதாக மாணவர்களுக்கு கிடைக்கும் வகையிலேயே, டிசெம்பர் மாதங்களில் இத்திட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே, இவ்வருடமும் டிசெம்பர் மாதத்தில் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

“எனவே, இம்முறை பெப்ரவரி மாதத்தில் தேர்தல் வருகின்றது என்ற ஒரே காரணத்துக்காக, இத்திட்டம் தேர்தலை முன்னிறுத்தி செய்யப்படுகிறது என்பது தவறானதாகும்.

“நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், ஒரு தொகுதி மக்களுக்கான விநியோகத்தை நாம் நடத்திக் கொண்டிருந்தோம். அவ்வேளை அங்கு வந்த காத்தான்குடி பொலிஸார், தேர்தல் காலம் என்பதனால் இதனை நடத்துவதை தவிர்க்கும்படி கூறினர்.

“அதனை ஏற்றுக்கொண்ட நாம், உடனடியாகவே அதை நிறுத்தினோம். பொலிஸாரும் எமது பதிலில் திருப்தி கண்டு, திரும்பிச் சென்றனர். அங்கு வந்திருந்த மக்களையும் அனுப்பி வைத்தோம்.

“சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த பொலிஸார், கொஞ்சம் கடுமையாக பேசவும் நடத்து கொள்ளவும் தொடங்கினர். அவர்களது அறிவுரைக்கமைய ஏற்கெனவே நிகழ்வை நாம் நிறுத்தி விட்ட நிலையிலும், அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது.

“அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி, பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு போக வேண்டுமென வலியுறுத்தினர். அங்கிருந்த சில சகோதரர்களையும் அழைத்துச் செல்ல முனைந்தனர்.

“காத்தான்குடி பிரதேசத்தில் அதிகாரத்தில் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, பொலிஸார் வந்துள்ளனரெனத் தெரியவந்துள்ளது.

“இத்திட்டம் தேர்தலுக்கான திட்டமல்ல, வருடாந்த நிகழ்ச்சித் திட்டம்' என்பதை நாம் தெளிவுபடுத்தியதன் பின்னர் அங்கிருந்த சில புத்தகப்பெட்டிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு பொலிஸார் சென்றனர்.

“எம்மையும் பொலிஸ் நிலையத்துக்கு வந்து மேலதிக விளக்கங்களைத் தருமாறு கூறினர். அது போலவே நாமும் செய்தோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .