2025 மே 14, புதன்கிழமை

பாடசாலைக்கு சென்ற சகோதரன் சடலமாகவே மீட்கப்பட்டார்

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

2000.11.19ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற எனது இளைய சகோதரன் நடராஜா செந்தூரன்(வயது 19) இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார் என வாழைச்சேனையை சேர்ந்த ந.சிவலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்ளப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற  காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கறுவாக்கேணி வித்தியாலயத்திலேயே எனது சகோதரர் கல்வி பயின்று வந்தார். காலை 8 மணிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு கவலையுற்று பல இடங்களிலும் தேடினோம் பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் எனது சகோதரனின் சடலத்தை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம். பின்னர்  சடலத்தை ஏறாவூர் வைத்தியசாலையில் பெற்றுக் கொண்டோம்.

இதுவரைக்கும் எனது சகோதரனை யார் கொலை செய்தார்கள் என்பதை அறியமுடியவில்லை. அக்காலப்பகுதியில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களும் இருந்தன.

இதேபோன்று, எனது மற்றைய சகோதரர் ந.பரமேஸவரன் (வயது 29)  என்வர் 2005ஆம் ஆண்டு காலப் பகுதியில்  வந்தாறுமூலைக்கு மேசன் தொழிலுக்காக சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.இவரையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்று அறியமுடியாமல் போய்விட்டது.

இதேவேளை, எனது மூத்த சகோதரர் ந.விணாயகமூர்த்தி (வயது 31) என்பவர் 1985ஆம் ஆண்டில் கும்புறுமூலை பகுதிக்கு வழக்கம் போல் மீன்வியாபார நடவடிக்கைக்காக சென்ற வேளை காணமால் போயிருந்தார். இவரை அக்காலப் பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினரே பிடித்து சென்றிருந்தார்கள் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது மட்டுமல்லமால் 1989ஆம் ஆண்டு  எனக்கு 18 வயது இருக்கும் போது இரவு நேரத்தில் வீடு வந்த சிலர் வளவின் கதவை உடைத்து அம்மாவை அழைத்து தலையில் வெடி வைத்து சுட்டுக் கொன்றனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X