2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பட்டிப்பொங்கல் கறுப்பு நாளாக அனுஷ்டிப்பு

Mayu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ் 

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

குறித்த போராட்டமானது செவ்வாய்க்கிழமை (16) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரைப் பகுதியில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் அயல் மாவட்ட பெரும்பான்மைய இனத்தவரால் அங்கு கால் நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு ஏற்படுத்தப்படும் இன்னல்கள், அழிவுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும், மேற்படி பிரதேசத்தில் அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அகற்றி தங்கள் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் 124 நாள் கடந்துள்ள நிலையில் 124 பொங்கல் பானைகளை கறுப்பு நாடா கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.

பச்சைத் தரை எங்கும் இரத்தக் கறை என்ற மகுடவாசகத்துடன் பண்ணையாளர்கள் மேலாடையின்று 126 வெற்றுப் பொங்கல் பாணைகள் சகிதம் குறித்த ஆர்ப்பாட்டம் காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி பின்னர் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று அங்கு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள், அரசியற் பிரதிநிதிகள் என்போருடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் மேற்கொண்டு இறுதியில் பண்ணையாளர்களினால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் அரசாங்க அதிபர் புதிதாக நியமனம் பெற்றவர் என்ற ரீதயில் அவர் மேற்படி விடங்களை கவனத்திற் கொள்வதாக தெரிவித்த வாக்குறுதிக்கு அமைவாக குறித்த போராட்டம் நிறைவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் மயிலத்தமடு பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன்,  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்களால் இதுவரை 254 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .