எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 மே 22 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், 27,769 புதிய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து புதிய சமுர்த்திப் பயனாளிகளை இணைத்துக் கொள்வதற்கான மீளாய்வுக் கூட்டம், இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் பங்கேற்புடன், ஏறாவூர் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சமூக வலுவூட்டல், ஆரம்பக் கைத்தொழில் அமைச்சால், அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் கீழ், 6 இலட்சம் புதிய பயனாளிகள் சமுர்த்தி திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் 30ஆம் திகதி, அம்பாறையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது அமைச்சின் கீழுள்ள சமூர்த்தித் திணைக்களத்தினூடாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து வறிய நிலையிலுள்ள 27,769 குடும்பங்களுக்கு, புதிதாக சமூர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்மைக் காலங்களில் சமுர்த்தி நிவாரண முத்திரைக்காக, புதிதாக விண்ணப்பித்தவர்களதும் இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தவர்களதும் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, மிக தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களையும் அடுத்தடுத்தக் கட்டங்களில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .