2026 மார்ச் 26, வியாழக்கிழமை

புறாச் சண்டை கத்திக்குத்தில் முடிந்தது

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எறாவூர் பொலிஸ் பிரிவு, ஹிதாயத்நகர் கிராமத்தில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த புறாச் சண்டை, கத்திக்குத்தில் முடிந்ததில் கைதுசெய்யப்பட்ட நபர் உட்பட இருவர் காயங்களுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் - ஹிதாயத்நகர் கிராமத்தில் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், அக்கிராமத்தைச் சேர்ந்த எம். சியாம் (வயது 24) எனும் இளைஞன் கத்திக்குத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரான லாபிர் முஹம்மது ஸபீர் (வயது 25) எனும் இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவரது வளர்ப்புப் புறாக்களை மற்றையவர் திருடிச் சென்று தனது வீட்டில் வைத்திருந்ததாகவும் அதனை நோட்டமிட்ட புறாவின் உரிமையாளர் அவற்றைக் கைப்பற்றுவதற்காக சென்ற போதே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த வாய்த்தர்க்கம் முற்றி, கத்திக்குத்தாக மாறியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சியாம் என்பவரின் முதுகுப் புறத்தில் 6 தடவைகள் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபரான ஸபீர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .