Princiya Dixci / 2021 மார்ச் 18 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கொழும்பு போன்ற பெரு நகரங்களிலேயே காணப்பட்ட போதைப்பொருள் பாவனை கிராமங்களுக்கும் ஊடுருவியிருப்பது ஆபத்தானது என எச்சரித்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன, இது தொடர்பாக கிராம மக்கள் விழிப்பாக இருந்து, தங்களையும் எதிர்கால சந்தியினரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொணடார்.
போதைப்பொருள் பாவனை உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எம்.எஸ் நழீம் தலைமையில், நேற்று (17) மாலை நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், “போதைப்பொருள் வலையில் தற்போதைய இளம் சமுதாயத்தினர் குறிப்பாக மாணவர்கள் சிக்க வைக்கப்படுகின்றார்கள். இது மிகவும் ஆபத்தானதும் அழிவைக் கொண்டு வரக் கூடியதுமான செயற்பாடாகும்.
“எனவே, போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை தகர்த்தெறிவதில் பொலிஸாருடன் இணைந்து சமூகத்திலுள்ள அத்தனை தரப்பாரும் அக்கறை காட்ட வேண்டும்.
“போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனை பற்றி அறிந்து கொள்ளும் எவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி எமது தொடர்பாலுக்குள் வந்து விடயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தருபவர் யார் எவர் என்கின்ற விடயங்கள் எமக்குத் தேவைப்படாது. அதனால் தயக்கமின்றி எந்நேரமும் 0652224426 எனும் இந்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல் தர முன்வாருங்கள்” என்றார்.
இந்தக் கலந்துரையாடலில், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஏ.கே.ஏ. ஸவாஹிர், ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா வஸீம், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவர் டான் சௌந்தரராஜன், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். சியாஹுல்ஹக் உட்பட பல துறைசார்ந்த அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளிவாசல், பொது நிறுவனங்களினது அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .