2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் காணி அபகரிப்பைத் தடுக்க முஸ்தீபு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மயிலந்தனமடு, மாதவனை ஆகிய பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைக் காணிகளை, வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், பௌத்த பிக்குகள் சிலரும் அபகரிப்பதைத் தடுப்பதற்கான தீர்மானங்கள், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இவ்விடயம் தொடர்பான தீர்மானம்மிக்க கலந்துரையாடலானது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் மட்டக்களப்பில் நேற்று (11) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், த.கனகசபை, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் க.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சட்டவிரோத காணி அபகரிப்புத் தொடர்பாக ஆராய்ந்தனர். 

அதையடுத்து, ஐந்து கட்டங்களாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதென, ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

முதலாவதாக, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், காணி தொடர்பான விடங்களைக் கையாளும் மேலதிக அரச அதிபர், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய சந்திப்பொன்றை ஏற்படுத்துதல். 

இரண்டாவதாக, கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி, மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி பயிர்ச்செய்கை செய்பவர்களைத் தடுத்தல். 

மூன்றாவதாக, பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி, நடவடிக்கை மேற்கொள்ளல். 

நான்காவதாக, பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்பாளர்களுடன் இணைந்து, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வது.  

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் இரு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படுவதுடன், இந்த நான்கு விடயங்களுக்கும் சாதகமான பதில்கள் கிடைக்காதுவிடின், ஐந்தாவதாக உயர்நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் அதற்கான சகல ஆவணங்களையும் உடன் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .