2026 மார்ச் 07, சனிக்கிழமை

மட்டக்களப்பு எல்லை சோதனைச்சாவடியில் தகவல் திரட்டு

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், பொலிஸ் சோதனைச்சாவடி அமைத்து மாவட்டத்துக்குள் உள்நுழைபவர்கள், வெளிச்செல்பவர்கள்  தொடர்பான விவரங்களை பதிவது என மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள சலூன்களை, இன்று (02) முதல் முடிவெட்டுவதற்கு மாத்திரம் கட்டுப்பாட்டுடன் திறக்கவும் மேற்படி செயலணியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய கொவிட் 19 நிலைமை தொடர்பாக ஆராய்பவதற்காக, மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேறறு (01) மாலை நடைபெற்றது.

இதன்போதே, மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை தவிர, மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு,  மேலும் சில இறுக்கமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டதுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோருடைய பெயர் விவரங்களை, மாவட்டத்தின் எல்லைகளான வெருகல், பெரியநீலாவணை, பதுளை வீதி, றெதிதென்ன போன்ற இடங்களில் பொலிஸார் பதிவுகளை மேற்கொள்வது.

அவர்களின் விவரங்களை மாகாண சுகாதாரப் பணிமனைக்கு அனுப்புவதுடன், அவர்களைக் கண்காணித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் வண்டிகள், அதே போன்று தனியார் பஸ் வண்டிகள் மாவட்டத்துக்கு வெளியே செல்வது தொடர்பில் விபரங்களை பெற்றுக் கொள்வது.

மாநகர,  பிரதேச மட்டங்களில் விழப்புணர்வை ஏற்படுத்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக நடவடிக்கை எடுத்தல்.

மாவட்டத்திலிருந்து அத்தியாவசிய சேவைளுக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்வோர், அவர்களின் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்சினி சிறீகாந், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேயசேன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .