2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘’ரணவிரு’ குடும்பங்கள் கஷ்டத்தில் உள்ளன’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த காலத்தில் தம்மை நாட்டுக்காக அர்ப்பணித்த 'ரணவிரு சேவா' எனப்படும் பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸாரைக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அவர்களின் குடும்பங்கள் தற்போது தமது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பில் புதன்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் 'ரணவிரு சேவா' குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் போது தேசிய ரீதியில் தமது சேவையை வழங்கிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களில் தங்கியிருந்த குடும்பங்கள் தமது வாழ்க்கைத் துணைவர்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்துள்ளார்கள்.

“அவர்கள் நாட்டுக்காக தங்களைத் தியாகஞ் செய்துள்ள போதிலும் தற்போது அவர்களது குடும்பங்கள் மிகக் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

“அவர்களது சேவை என்றென்றும் போற்றப்படவும் நன்றி கூரப்படவும் வேண்டும்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் 'ரணவிரு சேவா' குடும்பங்களைச் சேர்ந்த மிகவும் கஷ்ட நிலையிலுள்ள அங்கத்தவர்களுக்கு வீடுகளை நிருமாணித்துக் கொடுக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

“அதற்கும் மேலதிகமாக அவர்களது வாழ்வாதாரத் தேவைக்காக பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் விவசாயம், சுயதொழில்  போன்ற முயற்சிகளுக்கும் ஊக்கமும் உதவியும் அளிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டு வளங்களைப் பயன்படுத்தும் முகமாக ஜனாதிபதியின் முக்கியமான தூண்டுகோல் விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

“அதற்காகவும் 'ரணவிரு சேவா' குடும்பங்கள் ஊக்கமளிக்கபப்டுகின்றன.

“'ரணவிரு சேவா' குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் மற்றும் தமது அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான தொழினுட்ப, உபகரண மற்றும் முதலீட்டு உதவிகளுக்காக வேண்டுகோள் விடுக்கும்பட்சத்தில் அதனைச் செய்து கொடுக்க மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் தயாராக இருந்து கொண்டிருக்கின்றது” என்றார்.

இந்நிகழ்வில் 'ரணவிரு சேவா' அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக 'ரணவிரு சேவா' குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 39 வீடுகள் நிருமாணிக்கப்பட்டு வருகின்றளன.

இவற்றில் 19 தமிழ், 19 முஸ்லிம் மற்றும் ஒரு சிங்கள குடும்பத்திற்கு இந்த வீடுகள் சுமார் 22 இலட்சம் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X