2025 ஜூன் 21, சனிக்கிழமை

‘வாழைச்சேனையில் அதிக போதைபொருள் பாவனை’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையப் பிரிவுகளில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்ட பகுதியிலேயே, அதிக போதைப் பாவனையாளர்கள் உள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலைய, போதை ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.சிவதர்சன் தெரிவித்தார்.
“போதைப்பொருள் பாவனையில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்போம்” என்னும் தொனிப்பொருளில், ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில், வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இன்று (24) இடம்பெற்ற விழிப்புணர்வுப் பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் 12 பொலிஸ் நிலையங்கள் உள்ள நிலையில், வாழைச்சேனையிலேயே, போதைப்பொருள் பாவனை தொடர்பான அதிக விசாரணைகள் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், இப்பிரிவில் கஞ்சா, அபின், ​ஹெரோய்ன் ஆகியவற்றோடு, இப்போது புதிதாக போதை மாத்திரைகளும் அதிகளவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “போதை மாத்திரைகளைப் பாவித்திருந்தால், அதனை வெளிப்படையாக உணர்ந்து கொள்ள முடியாத நிலை காணப்படும்.
போதை மாத்திரைகளின் பாவனை தொடர்பாக, வாழைச்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பாடசாலை மாணவர்கள் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பாடசாலை மாணவர்கள் விளையாடும் இடங்களுக்குச் சென்று அவர்களைச் சோதனை செய்யும் போது, பொக்கெட்டில் போதை மாத்திரைகள் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பாடசாலைகளுக்குச் சென்று, விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்.
வித்தியாலயத்தின் அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.அஜ்மீர், ஆசிரிய ஆலோசகர் எம்.சபூர், வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி.எம்.முஸம்மில் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .