கனகராசா சரவணன், எச்.எம்.எம்.பர்ஸான், வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு மைய்யக் காரியாலயத்தை, மாவட்ட செயலகத்தில் இன்று (09) திறந்துவைத்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில், இதுவரை 48 பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து ஏற்கெனவே வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில், நேற்று (08) மாலை மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய, மேற்படி பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில், ஒக்டோபர் 23ஆம் திகதி ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட சுமார் 200 பேருக்கு பிசிஆர் பரிசோதனையின் போதே, இந்த 6 பேரும், கொரோனா வைரஸ் தொற்றாளர்கலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இராணுவத்தினர், சுகாதார பிரிவினர், பொலிஸார், மாவட்டச் செயலகம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கொரோனா தடுப்பு மையத்தை, மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மைய்யத்துக்கு, மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அனைத்துத் தகவலும் உடனுக்குடன் வந்தடையும் எனவும் அந்தத் தகவல்களை உரிய பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உடன் வழங்கப்படுவதுடன், 24 மணிநேரமும் தொடர்ந்து இந்த மைய்யம் இயங்கும் 065 2226874 என்ற இலக்கத்துடன் மைய்யத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.