2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘வீடுகள் வழங்கும் விடயத்தில் ஊழல், மோசடிகள் வேண்டாம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“வீடுகள் வழங்கும் விடயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்குக் கொள்வது அதிகாரிகளின் பொறுப்பாகும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

செமட்ட செவண வீடமைப்பு திட்டத்தின் கீழ், விசிரி வீடமைப்புக் கடன் காசோலைகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு, டேர்பா மண்டபத்தில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய போது அவர் தெரிவித்ததாவது,

“வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், வீடில்லாமல் மிகவும் சிரமத்துடன் வாழ்கின்றனர்.

“இந்த நிலையில், தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படல் வேண்டும். தகுதியற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்படக் கூடாது.

“பாதிக்கப்பட்ட மக்களை சரியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கே, வீடுகள் வழங்கப்படல் வேண்டும். வீடுகள் வழங்கும் விடயத்தில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக எமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

“இது விடயத்தில் அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, வீடுகளை பெற்றுக்கொள்கின்ற நிலைமை வரக் கூடாது.

“நடுத்தரமானவர்களுக்கு வீடுகளை வழங்காமல், வறிய, வீட்டு வசதியற்ற மற்றும் யுத்தம், இயற்கை போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படல் வேண்டும்.

“சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மானிக்கப்பட்ட வீடுகளின் கூரைகள் பழுதடைந்து போயுள்ளன. இதனால் அதில் குடியிருப்போர் சிரமப்படுகின்றனர். தரமான மரங்கள் அதற்குப் போடப்பட வில்லை. அவைகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

“எதிர்காலத்தில் வீட்டுப்பிரச்சினையை நீக்கி, வைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கையை எடுத்து வருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X