2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரமாழான் கால ஆரோக்கிய வழிகாட்டி

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  

ரமழான் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள்:

ஆரோக்கியம் என்பது அல்லாஹ் உலகில் மனிதனுக்கு வழங்கக் கூடிய மிகப் பெரும் ஒரு நன்கொடைகளில் ஒன்றாகும். பாவமன்னிப்பையும் உடலாரோக்கியத்தையும் அல்லாஹ்விடம் அதிகம் கேட்குமாறு நபிகள் (ஸல்) அவர்களும் உபதேசித்தார்கள். இஸ்லாம் கூறும் விதத்தில் நோன்பு நோற்கப்படுமாயின் அது ஆரோக்கியத்திட்கு பெரிதும் துணை புறியும்.

'நோன்பு நோற்பதன் மூலம் ஆரோக்கியமடையுங்கள்' என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதே வேளை, நோன்பு நோற்பதன் மூலம் ஏற்படக் கூடிய பல சுகாதார நன்மைகள் பற்றிய தகவல்கள் விஞ்ஞான ஆய்வுகள் மூலமும் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஆனால், இந்த நற்பயன்களை நாம் அடைகின்றோமா என்றால் மிகவும் சிறிதளவே அடைகின்றோம் என்பதே உண்மை நிலையாகும். உணவு உண்பது தொடர்பாக இஸ்லாம் காட்டித் தரும் நல்ல பழக்கங்கள் நம்மிடம் இல்லாததே இதற்கான முக்கிய காரணமாகும்.

அன்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வின் போது, பெரும்பான்மை சமூகத்தவருடன் ஒப்பிடுகைளில் முஸ்லிம்கள் 3 மடங்கு அதிகமாக சக்கரை வியாதி எனப்படும் நீரிழவு நோய்க்கு ஆளாவது தெரிய வந்துள்ளது.

ஏனைய பல வியாதிகள் தொடர்பான முஸ்லிம்களது நிலைமையும் ஏறத்தாள இதே போல இருப்பதும் புலனாகியுள்ளது. மேலும், முஸ்லிம் ஆண்களில் 35 சத வீதமும் பெண்களில் 43 சத வீதமும் உடல் பருமன் உடையவர்களாக இருப்பதும் கணிப்பீடுகளில் தெரிய வந்தது. உடல் பருமன், பெரிய வயிறு அதாவது தொந்தியானது பல நோய்களின் இருப்பிடமாகும் என மருத்துவ விஞ்ஞானம் எச்சரிக்கின்றது.

இதன் காரணமாக நிரிழவு, இருதய் நோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை, உடலுறவு இயலாமைகள் போன்ற நிலைகள் ஏற்;படுகின்றன. குறிப்பாக நீரிழவு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் முறை கேடான உணவு பழக்கங்கள் என்பதுடன் அது இருதய நோய், கிட்னி கோளாறுகள், பார்வை தொடர்பான சிக்கல்கள் மட்டுமின்றி உடலுறுப்புக்கள், குறிப்பாக கால், விரல்கள், துண்டிக்கப்பட வேண்டிய கவலைக்குரிய நிலைகளையும் ஏற்படுத்துவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.   

இவ்வகையில் இந்த பிரச்சினையின் பாரதூரம் மிகப் பெரியதாக இருப்பதாலும் அது போன்ற நோய் நிலைகள் ஏற்பட்டால் அதிக துன்பமும் பணச்செலவும் ஏற்படுவதாலும், இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமை என்ற ரீதியில் சில விளக்கங்களை தர நாம் எண்ணினோம்.

நமது உணவு உட்கொள்ளும் பழக்கத்தை இஸ்லாம் கூறும் விதத்தில் அமைத்து கொண்டால் மேற்படி நிலைகளில் இருந்து இன்ஷக் அல்லாஹ் பாரிய நல்ல  மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.

இந்த சுன்னத்தான பழக்க வழக்கங்களை நாம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது அவசியமாவதோடு ரமழான் காலம் இப்பயிற்சிக்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும். உண்மையில், இது விசுவாசிகளுக்கு அல்லாஹ் அளித்துள்ள பெரும் கிருபையாகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் அடிப்படையிலான ஆரோக்கிய வழிகாட்டல்கள் இந்த ரீதியிலேயே தொகுக்கப்பட்டுள்ளன:

•    இஃப்தார், அதாவது நோன்பு திறக்கும் நேர உணவு இதன் போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாவதுடன் இதன் போது அதிகமான தண்ணீர், பேரித்தம், பால், கனி வகைகள், பழச்சாறு கஞ்சி, தேநீர், கோபி, சூப், போன்றவையே நாம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உப்பு மற்றும் கொழுப்பு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவு வகைகளையும் வயிறு நிரைய உட்கொள்ளாமல் நடுத்தரமாக, வயிற்றில் காலி இடம் இருக்கும் விதத்திலேயே உட்கொள்ள வேண்டும். அதே வேளை, இஃப்தாரிலேயே அதிகம் காலத்தை செலவு செய்யாமல்;, உடனடியாக நாம் மஹ்ரிப் தொழுகையையும் நிறைவேற்றி விட வேண்டும்.  

•    இஃப்தாரின் போது, பொறித்த, மசாலா மற்றும் சுவையூடட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளும், அதிக இனிப்பான திண்பண்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும். நொறுக்கு தீணிகள். இறைச்சி, இறைச்சி கஞ்சி, பேகரி உணவு வகைகள், பிட்சா,(Pணைணய) பர்கர்(டீரசபநச) போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. இந்த உணவு வகைகளில் அதிக கொழுப்பு இருப்பதால் பல நோய்கள் ஏற்படும் ஆபத்துள்ளது. மேலும் குளிர் பானங்களை, நோன்பு காலத்தில் மட்டுமின்றி ஏனைய காலங்களிலும் நாம் தவிர்க்க வேண்டும்.

•    பல நோய்கள் ஏற்படுவதற்கான காரணம் நோன்பு திறக்கும் நேரத்தில் மேலே விவரிக்கப்பட்ட கேடு விளைவிக்கக் கூடிய உணவு வகைகளால் நாம் வயிற்றை அளவு மீறி நிரப்புவதேயாகும்.

•    எளிமையான விதத்தில் நோன்பு திறந்ததன் பின் மஹ்ரிபிட்கு பிறகு மரக்கறி, கனிவகைகள் உள்ள உணவை அளவோடு உண்பதே நல்லதாகும். தேவையானால் பால் போன்ற ஒரு பான வகையை படுக்கைக்கு செல்வதற்கு முன் சிறிது அருந்தலாம்.  

•    சஹர் நேரத்திலும் அதிகமான மரக்கறி, கீரைகள், பழங்களுடன் சிறிது சோறு போதுமானது. அதே போன்று சஹர் நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பது சமிபாட்டிட்கும் நோன்பிருக்கும் பகல் நேரத்தில் கிட்னியின் இயக்கத்திற்கும் உதவியாக இருக்கும்.       

•    சஹர் நேரத்தில் வயிறு புடைக்க உணவு உண்றால் பகல் காலத்தில் பசி எடுக்காது என்பது தவறான எண்ணமாகும். மேலும், சஹர் உணவென்பது ஒரு சாப்பாடு நேரம் அல்ல மாறாக அது ஒரு நபிவழி சுன்னத்தாகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அத்துடன், சஹர் உணவில் அல்லாஹ் விசேட பறகத் செய்துள்ளான் என்பதையும் பறகத் என்பது அளவில் இல்லை என்பதையும் நாம் புறிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அல்லாஹ் சிறிய அளவில், எளிமையாக மேற்கொள்ளப்படும் விடயங்களுக்கே பறகத் செய்கின்றான்.

•    ஹதீஸ்களின் கருத்துப்படி ஒரு மனிதன் தன்னுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவாலும், இன்னுமொரு பகுதியை தண்ணீராலும் நிரப்பி ஒரு பகுதியை மூச்சு விடுவதற்கு காலியாக வைப்பதே மிக நல்லதாகும். இது நோன்பு காலத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் பேணப்பட வேண்டிய முக்கிய சுன்னத் ஒன்றாகும்.   

•    நிரப்பப் படுபவைகளில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பானது மனிதனின் வயிறுதான் என்ற கருத்தும் ஹதீஸ்களில் வந்துள்ளது. அத்துடன், மனிதன் திருப்தி அடையும் விதத்தில் அது நிரப்பப்படுவதே இல்லை என்றும் கப்றின் மண்ணே அதை முற்றாக நிரப்ப முடியும் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. அதாவது மரணம் வரை மனிதன் தன்னுடைய வயிற்றின் தேவை உட்பட்ட ஏனைய எந்த வேட்கையையும் முற்றாக நிறைவு செய்து கொள்வதில்லை என்பது இதன் கருத்தாகும்.

•    பல் துலக்குவதானது, நோன்பு காலத்தில் மறந்து விடப்படும் ஒரு விடயமாகி வருகின்றது. வாய் சுத்தம் மிக அவசியமாவதுடன், நோன்பு காலத்தில் சஹர் மற்றும் இஃப்தார் நேரங்களில் நாம் பல் துலக்கி வாயின் சுத்தத்தை பேண வேண்டும்.

•    அளவு மீறிய தூக்கம், குறிப்பாக ரமழானில், முஸ்லிம்கள் இடையே அதிகம் காணப்படும் ஒரு தீய பழக்கமாகும். சஹர் உணவு உண்டவுடன் சுபஹ் தொழுகை தொழுதவுடன் (சிலர் தோழாமலேயே) நிரம்பிய வயிற்றுடன் படுக்கையில் விழுந்து விடுகின்றனர். இவர்கள் ழுஹர் வரையும் அல்லது அதற்கு அப்பாலும் தொடர்ந்து உறங்குவதுண்டு. இது மிக மோசமான பழக்கமாகும். முஸ்லிம் பாடசாலைகளின்  விடுமுறை இதற்கு ஒரு வசதியாக இருக்கின்றது. அதிக பட்சம் 6 மணி நேரம் உறங்குவது போதுமானதாகும். இரவு தராவிஹ் தொழுகைக்குப் பின் உறங்குவது தவிர, ழுஹருக்கு முன் ழுஹாவுடைய நேரத்தில் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் உறங்குவது அல்லது அஸர் தொழுகைக்கு முன் சற்று உறங்குவது போதுமானதும் சிறந்ததுமாகும்.     

•    பாரதூரமற்ற நோய் உள்ளவர்கள், கற்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தமது மருந்து, வகைகளை உட்கொள்ளும் நேரத்தில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு நோன்பு பிடிக்க முயற்சிக்க வேண்டும். நீரிழவு நோயுள்ளவர்களும் மருந்து நேரங்களில் சில மாற்றங்களை செய்து நோன்பு பிடிப்பது அவர்களுக்கு நன்மைகளை தருவது மட்டுமின்றி, நோன்பு பிடிப்பதானது அவர்களுடைய நோய்க்கான சிகிச்சை ஒன்று என்பதையும் மறந்து விடக்கூடாது. கடுமையான நோய்கள் உள்ளவர்கள் மட்டும் ரமழான் காலத்தில் மருத்துவ ஆலோசனை மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல்கள்படி நடந்து கொள்ள வேண்டும்.

•    நோன்பு மாதம் பிறர் துண்பத்தை நாமும் உணர்வதற்கான ஒரு காலப்பகுதியாகும். நாம் அளவு மீறி உணவு வகைகளை வீணடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம் பசியை போக்க சிறிது உணவின்றி பலர் துண்பப்படுவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நம்மால் இயன்ற உதவி ஒத்தாசைகளை ஏழைகளுக்கு நாம் செய்ய முற்படவேண்டும். இந்த மனோபாவம் ரமழான் அல்லாத காலங்களிலும் நம்மில் தொடர்ந்து இருப்பதே நோன்பின் தாத்பரியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.      

     

மேலே விவரிக்கப்பட்ட விடயங்களை பொது மக்களுக்கு மேலும் விளக்கமாக கூறுவதற்கு ஜும்ஆ மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களை பயன் படுத்துவது உலமாக்களின் பொறுப்பாகும். இதன் மூலம் இன்ஷக் அல்லாஹ் மக்கள் ஈருலகிலும் பெரும் பயன்களை பெறலாம்.

இது மக்கள் மத்தியில் ரமழான காலத்தில் நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு சிறிய முயற்சியாகும்;. வல்ல அல்லாஹ் நமது நல்ல முயற்சிகளை ஏற்று சிறந்த நற்கூலிகளை தந்தருள்வானாக.

ஆக்கம்: - டாக்டர் ஸரூக் சஹாப்தீன், (MBBS, MD, MRCP, FCCP)
அரச மூலாதார மருத்துவமனை, மாவனெல்லை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .