2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

'இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்படும்' : திலகர் எம்.பி

Sudharshini   / 2016 மே 24 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

லிந்துலை, ஊவாக்கலை தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, விரைவில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உறுதியளித்துள்ளார்.

அனர்த்தங்களினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் திகாம்பரத்தின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 6 மாதங்களுக்குள் இவ்வீட்டுத்திட்டம் பூர்த்தியடையும் எனவும் அவர் இதன்போது கூறினார்.

ஊவாக்கலை தோட்டத்தில் இடம்பெயர்ந்து, தோட்ட மைதானத்தில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள மக்களை திங்கட்கிழமை(23) நேரில் சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், ' வெகுவிரைவில், ஊவாக்கலை தோட்டத்துக்கும் தனி வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படும். தற்போது, தற்காலிக கூடாரங்களில் இருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய குடும்பங்களும் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படுவர்' என்றார்.

வீடமைப்பு தொடர்பில், மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம் தேசிய வீடமைப்பு அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக  திலகர் எம்.பி. மேலும் கூறினார்..

இத்தோட்டத்தில், 5 வருடங்களுக்கு முன் வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட லயன் அறைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.

இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா, லிந்துலை பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .