Sudharshini / 2016 ஜூன் 05 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
'பெருந்தோட்டப்புற பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை அதிகமாகக் காணப்படுகின்றது. பாடசாலைக்கான வளங்களை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை அதிபர்கள், கல்வி அமைச்சருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும்' என பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வி.புத்திரசிகாமணி தெரிவித்தார்.
'மலையக மக்கள் எதனையும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது. போராடித்தான் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது' எனவும் அவர் கூறினார். அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் அப்துல் அஸீஸின் 26ஆவது ஆண்டு நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் கூறிய அவர்,
'நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், புதிதாக நியமனம்பெற்ற ஆசிரியர்கள், கிராம பாடசாலைக்குச் சென்றார்கள். நான் அவர்களை மீண்டும் தோட்டப் பாடசாலைகளுக்கு அனுப்பும்போது, எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தோட்டப்புற சிறுவர்களின் கல்வி அபிவிருத்தியை மட்டுமே நான் கருத்திற்கொண்டேன். அதனால், எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் கவலைகொள்ளவில்லை' என்றார். 'அஸீஸ் காலத்தில் கடைசியாக நடைப்பெற்ற சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொண்டேன். அப்போது 4 சதவீதமாக இருந்த வாழ்க்கைப் புள்ளி 6 சதவீதமாக அதிகரித்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேசக் கூடிய தகுதி பெற்றவன் நான்தான்.
அமரர் தொண்டமான்-அஸீஸ் இருவரும் நல்ல நண்பர்கள். கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டப்போது, அஸீஸ், தொண்டமானைப் பார்த்து 'முட்டாள் காரியம் செய்துவிட்டாய். காலப்போக்கில் இதனை எமது மக்கள் அனுபவிப்பர்' என்று கூறினார்.
அஸீஸ் கூறியதைப் போன்று இன்று நாம் அதனை அனுபவிக்கின்றோம்' என்றார். 'நாட்டில் நல்லாட்சி காணப்படுகின்றது. எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கான சாத்தியமும் உள்ளது. இருப்பினும், போராட்டங்கள் மூலமே நாங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது' என அவர் மேலும் கூறினார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026