2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

'மத்திய மாகாண தமிழ்க் கல்வி பிரிவு திரிசங்கு நிலையில் உள்ளது'

Kogilavani   / 2016 ஜூன் 19 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்விப் பிரிவில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் மாகாணத்தின் தமிழ்க் கல்வி வளர்ச்சி பாதிப்படைந்துள்ளதுடன் அதிபர், ஆசிரியர் திரிசங்கு நிலைக்கு உள்ளாகியுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தனர்.

'குறிப்பிட்ட தொழிற்சங்கமொன்றின் மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்டு ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர் கூட்டத்தை நடத்தியமை சட்டவிரோதமானது' எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர் கவனம் செலுத்தாவிடின் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுமெனவும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,  கடந்த 13ஆம் திகதி, ஹட்டன் சீடாவள நிலையத்தில் அதிபர்களுக்கான கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாகாண அமைச்சர் ஒருவரும் அவர் சார்ந்த தொழிற்சங்கத்தின் மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர். அத்துடன் மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஒருவரும் கல்வி அதிகாரி ஒருவரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்கள், தமது கட்சி சார்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு அதிபர்களை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிபர்கள் பலர் மனக்கிலேசத்துக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து ஒரே பாடசாலையில் ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றும் அதிபர்களை வேறு பாடசாலைகளுக்கு இடம்மாற்றம் செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

அதிகாரமில்லாதவர்களைக் கொண்டு அதிபர் கூட்டத்தை நடத்தியுள்ள ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர், தானொரு அரசாங்க உத்தியோகத்தர் என்பதை மறந்துள்ளார். அத்துடன் இவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு மத்திய மாகாண தமிழ்க் கல்விப் பிரிவின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்' என்றார்.

மேலும் 'அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பல விடயங்கள் இடம்பெறுவதால்  மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்வி வளர்ச்சி  பின்னடைவை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வியமைச்சின் நிதியிலிருந்து பாடசாலைகளுக்குக் கட்டட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்கூட தனிப்பட்ட அரசியல் தலையீடுகள் இடம்பெறுகின்றன. இதனால், பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .