2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 03 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் ஹட்டன் பிராந்திய கற்கை நிலையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை பாராட்டத்தக்கதென பிரிடோ அறிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


மலையகத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தின் அவசியம் குறித்து கல்விமான்கள் குரல் கொடுத்துவரும் பின்னணியில் ஹட்டன் பிரதேசத்தில் திறந்த பல்கலைக்கழகக் கற்கை நிலையத்துக்காக நிலம் ஒதுக்கப்பட்டு பல வருடங்களாகியும் அங்கு தேவையான கட்டிடங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும்  குறிப்பிட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டால் அதனை வெளியார் ஆக்கிரமித்துவிடக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,  இக்காணியில் திறந்த பல்கலைகலைகழகத்திறக்கான கட்டிடத்தை கட்டுவதற்கு ஆரம்ப நிதியாக ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

திறந்த பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி சந்திரபோஸ்; தலைமையிலான குழு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்ததன் விளைவாக இந்த நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. மலையகத்தின் கல்வி வளர்ச்சியின் தேவையைக் கருத்தில் கொண்டு இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்தமைக்காக அமைச்சர் தொண்டமானிற்கும் இதுவிடயத்தில்  மலையக சிவில் சமூகத்தின் சார்பில் இந்த விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த கலாநிதி சந்திரபோஸ் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உட்பட்ட குழுவினருக்கும் பிரிடோ நிறுவனம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.


திறந்த பல்கலைக்கழக கற்கைநெறிகள் மலையக பகுதிகளில் தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்து ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் பிரிடோ நிறுவனம் நிரந்த கட்டிட வசதியில்லாதவிடத்து பல பாடநெறிகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்து. கடந்த காலங்களில்  மலையக பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்காக  ஒதுக்கீடு செய்யப்படுவதாக  கூறப்பட்ட பல  நிதிகளை பயன்படுத்துவதற்கான உடனடி திட்டங்கள் செயல்படுத்தப்படாததால் அந்த நிதிகள் கிடைக்காமல் போனது மட்டுமின்றி , குறிப்பிட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வராமலே கைவிடப்பட்ட பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளதை அனுபவமாக கொண்டு  தற்போது வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள நிதியை உடனடியாகவே பயன்படுத்துவற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

எனினும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்ற விடயத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட வேலைகளை முன்னெடுப்பதற்கு தேவைஇயான நிதியை பெறுவதற்கு  முன்னேற்பாடுகளை தற்போதிருந்தே செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரிடோ நிறுவனம் வலியுறுத்துகிறது.

இதேவேளை, மலையக கல்வி வளர்சியில் மலையக சிவில் சமூகத்தின் பங்களி;ப்பு மிகவும் அவசியமாகவுள்ள இத்தருணத்தில் மலையக வர்த்தக சமூகம், நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள் வெறுமனே கோயில்களுக்கு நிதி வழங்கும் பொதுவான நடைமுறைக்கு அப்பால் சென்று  இந்த விடயத்திற்கு தங்களால் முடிந்தளவு நிதியுதவியை வழங்குவதன் மூலம் நீண்டகாலமாக நிறைவேற்ற முடியாதிருக்கும் இந்த பணியைத் துரிதப்படுத்த முன்வர வேண்டும் எனவும் பிரிடோ நிறுவனம் கோரிக்கை விடுக்கிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X