2026 மே 15, வெள்ளிக்கிழமை

பரீட்சை புள்ளிகள் வெளியிடாமல் நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதால் சந்தேகம்

Sudharshini   / 2015 மார்ச் 11 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

'ஆசிரியர் உதவியாளர்களின் நியமனம் தொடர்பாகவும் அவர்களுடைய நேர்முகத் தேர்வு தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள்; வெளியிடப்படுகின்றன. பரீட்சை புள்ளிகள் வெளியிடப்படாமல், நேர்முகத் தேர்வு நடைபெறுவதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர். இவை உண்மையில்லை, இவற்றுக்கென ஒரு நடைமுறை இருக்கின்றது' என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், புதன்கிழமை(11) வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வழங்கப்படவுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறுவிதமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. எனவே, இராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையிலும் இந்த நியமனம் தமிழ்மொழி மூலம் வழங்கப்படுவதாலும் இதுதொடர்பாக விளக்கமளிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற வகையிலேயே இந்த விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அதாவது, போட்டி பரீட்சை ஒன்று நடைபெற்ற பின்பு அதற்காக நடைபெறும் நேர்முகத் தேர்வில் புள்ளிகள் வழங்கப்படுமாக இருந்தால் போட்டி பரீட்சை முடிவுகள் வெளியிடப்படமாட்டாது. காரணம் நேர்முகத் தேர்வில் புள்ளிகள் வழங்கப்படும்போது ஏதாவது குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக போட்டி பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வில் குறைவான புள்ளிகளை வழங்கி அவருடைய வாய்ப்பை இல்லாமல் செய்யலாம். அல்லது போட்டி பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வில் அதிக புள்ளிகளை வழங்கி அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

ஆனால், தற்பொழுது யார் என்ன புள்ளிகளை பரீட்சையில் பெற்றிருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே நேர்முகத் தேர்வு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி நடைபெறும். இதன் காரணமாகவே போட்டி பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதில் எந்தவிதமான வேறுபாடுகளும் நடைபெற வாய்ப்பில்லை.

அதன் காரணமாகவே போட்டி பரீட்சைக்கான புள்ளிகள் வெளியிடாமல் நேர்முகத் தேர்வு நடைபெறுகின்றது. எனவே, நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்தவுடன் அனைவரும் பெற்றுக் கொண்ட புள்ளிகள் அனுப்பிவைக்கப்படும்.
இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் இதனை குழப்ப முயற்சி செய்கின்றார்கள். இதுதொடர்பாக அதிக கேள்வி எழுப்புகின்றவர்கள் யார் என்றால்; நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்களே. அதற்கு காரணம் அவர்கள் மிகவிரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்குவைத்து இதனை ஒரு துரும்பாக பயன்படுத்தி வருகின்றார்கள்.

எனவே, தேர்தலுக்காக இந்த நியமனத்தை குழப்பாமல் தகுதியானவர்களுக்கு இந்த நியமனம் கிடைக்க வேண்டும் என்பது மாத்திரமே எனது நிலைப்பாடாகும். மேலும் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த அளவில் அதிகமானவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

அவர்கள் அனைவருக்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். எனவே அவர்களை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் அரசியல் நடத்துவதுக்காக இதனை கையில் எடுத்துக் கொண்டு குழப்புகின்றார்கள். வேறு எந்த மாவட்டத்திலாவது இப்படி குழப்புகின்றார்களா? காரணம் அவர்களுக்கு நடைமுறை என்ன என்பது நன்கு தெரியும்.
இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே அனைத்து விடயங்களும் நடைபெறுகின்றன. நான் அதில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன் பிரகாரம் நாங்கள் செயற்படுகின்றோம்.

எனவே, இதனை புரிந்துக்கொள்ளுங்கள். நான் மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பல சேவைகளை கல்விக்காக செய்துள்ளேன். அவற்றில் இதுவரை எந்தவிதமான குறைபாடுகளும் இருந்ததாக இதுவரை யாரும் முறைப்பாடு செய்ததில்லை. எனவே, உங்கள் அனைவருக்கும் நேர்முகத் தேர்வின் பின்பு புள்ளிகள் வழங்கப்படும்.

மேலும் இவ்வாறு பேசுகின்றவர்கள் ஏன் சம்பந்தப்பட்ட பரீட்சை ஆணையாளரை நேரில் சந்தித்து இதனை பற்றி பேச முடியாது. அதனை செய்வதைவிட்விட்டு அறிக்கை வீரர்களாக இருப்பதால் என்ன பயன் எனவும் இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .