2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

8 கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

Sudharshini   / 2015 மார்ச் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

களனி வெளி பிளான்டேஷன் நிர்வாகத்தின் கீழுள்ள நுவரெலியா பிளான்டேஷன் தோட்டத் தொழிலாளர்கள்  8 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக தோட்ட நிர்வாகத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக தமக்கு உரிய தீர்வு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

வீடற்றவர்களுக்கான காணிகள் வழங்காமை, வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காமை, சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்காமை, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமை, பாதை வசதிகள் செய்து கொடுக்காமை, நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவதற்கான வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமை, குடியிருப்புகளை கடந்த பல வருடங்களாக திருத்தியமைக்காமை மற்றும் அவற்றுக்கான கூரைத்தகடுகளை நீண்ட நாட்களாக மாற்றாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிபகிஸ்கரிப்பில் தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் ஒரு பக்கத்தை  மறித்து தமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு தமது கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை தமது பணிப் பகிஸ்கரிப்பு தொடரும் எனவும் தெரிவித்தனர்.

இப்பணி பகிஸ்கரிப்பு தொடர்பாக நுவரெலியா தோட்டத்தின் பிரதி பொது முகாமையாளர் அநுர சேனநாயக்கவிடம் வினவிய போது,

தோட்ட தொழிலாளர்கள் வீடமைப்பு தொடர்பில் காணிகளை கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது அரச சார்பற்ற நிறவனங்களிடமிருந்தோ எமக்கு வீடமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைளும் முன்வைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே நாம் இன்னும் காணிகளை வழங்காமல் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு திட்டம் வழங்கப்படுமானால் நாம் உடனடியாக வீடமைப்புக்கான காணிகளை வழங்க தயாராகவே உள்ளோம்.

மேலும், சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய ஆசிரியர் ஒய்வு பெற்றுள்ளதால் அவருடைய இடத்துக்கு நாம் நான்கு பேரை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அவர்களை மிக விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்துடன், குடிநீர் திட்டத்துக்காக அண்மையில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திருத்த வேலைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஏனைய விடயங்கள் தொடர்பாக, தோட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசிக்காமல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு தொழிற்சங்கத்தின் செயற்பாடாகவே இருக்கின்றது. ஏனைய தொழிற்சங்க உறுப்பினர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதால் தோட்ட தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றார்கள்.

எமது தோட்டம் கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கி வந்த நிலையிலும், நாம் அவர்களுக்கான கொடுப்பனவுகளை எந்த காரணம் கொண்டும் நிறுத்தவில்லை. இதனையும் தொழிலாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் தோட்ட நிர்வாகம் என்ற வகையில் அநேகமான மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். பிரச்சினைகள் இருந்தால் அதனை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர பணிப் பகிஸ்கரிப்பு செய்வது பொருத்தமானதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .