Menaka Mookandi / 2015 ஜூன் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
இன்னும் 5 ஆண்டுகளில் மலையகத்தில் ஒரு இலட்சம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வொன்று, கடந்த சனிக்கிழமை (30), நானுஓயா, காந்தி மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'சொந்த வீடு மற்றும் சொந்த காணியே நமது இலக்கு. இந்த இலக்கினை அடைய என்னை நம்பி வாக்களியுங்கள். புதிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினூடாக நமது மக்களுக்காக என்னால் 374 வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க முடியும் எனின், இன்னும் 5 ஆண்டுகளில் என்னால் எத்தனை ஆயிரம் வீடுகளை எமது மலையக மக்களுக்காக அமைத்துக் கொடுக்க முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்' என்றார்.
'எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலே மலையக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வாக்களித்து எனது பலத்தை அதிகரித்தீர்களாயின் இன்னும் 5 ஆண்டுகளில் மலையகத்தில் ஒரு இலட்சம் வீடுகளை அமைத்து கொடுப்பேன்' என்றார்.
'மலையக அரசியல்வாதிகள் சிலர் அப்பியாச கொப்பிகளை மக்களுக்கு கொடுத்து விட்டு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் என்னைப் பற்றிதான் விமர்சிக்கின்றார்கள். நாங்கள் அடிக்கல் நாட்டிய இடங்களிலே புற்கள் முளைத்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கடந்த அரசாங்கத்தினூடாக அடிக்கல் நாட்டிய இடங்களே இன்று பெருங் காடாக உள்ளது.
மேலும் மலையகத்திலே மாடி வீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் அத்திட்டத்தினால் ஒரு பயனுமில்லை அத்;திட்டத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளில் மேல் மாடி குடியிருப்பில் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உடலை தூக்கிக் கொண்டு செல்வதற்கு கூட இட வசதிகளை அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
மக்களின் வசதிகளை உணர்ந்து இத்திட்டத்தினுடாக குடியிருப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது எங்களால் கட்டப்பட்டு வரும் வீடுகள் பெரிய அறை, 2 படுக்கையறைகள், சமையலறை, மலசலக்கூடம் கொண்டதாக காணப்படுகின்றது. மக்களின் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்றால்போல் அமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வீடுகளில் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் மக்களிடம் கையளிக்கப்படும்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்பொன்னையா, சோ.ஸ்ரீதரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago