2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நியாயமான சம்பளத்துக்கு வலியுறுத்துவோம்: இராஜதுரை எம்.பி.

Kogilavani   / 2015 ஜூலை 01 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.ஆ.கோகிலவாணி

ஏனைய அனைத்து துறைகளிலுள்ள தொழிலாளர்களுடன் ஒப்பிடும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதை நான்காம்கட்ட பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை தெரிவித்தார்.

கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'மலையக மக்களை பிரதிநித்துவப்படும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அப்படை சம்பளமாக 500 ரூபாயும் வாரத்துக்கு மூன்று நாட்கள் வேலையும் 15 கிலோகிராமுக்கு மேலதிகமாக கொழுந்து எடுக்கும் பட்சத்தில் கிலோ கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுமென முதலாளிமார் சம்மேளனத்தினால் கூறப்பட்டது.  வாரத்தில் 3 நாட்கள் எனும்போது அது பெருந்தோட்ட தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் செயற்பாடாகும். இது நியாயமற்றது. எனவே, தொழிற்சங்கங்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

நான்காம்கட்ட பேச்சுவார்த்தை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நியாயமானதாக வழங்கப்பட வேண்டும். வரவையும் உற்பத்தியையும் ஊக்குவிக்கும் முகமாக தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்' என்றார்.

மேலதிக கொடுப்பனவு எனும்போது தொழிலாளர்கள் தமது தொழிலின் மீது அதிக அக்கறை செலுத்துவதற்கு ஏதுவாக அமையும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .