Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கு தகுதியே இல்லாதபோதிலும், ஐக்கிய தேசியக் கட்சி பலவந்தமாக ஆட்சியை பெற்றுகொண்டு நாம் செய்த அபிவிருத்திப் பணிகளை 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் செய்ததைப் போன்று பெயர் பலகைகளை நாட்டி திறந்து வைத்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து சப்ரகமுவ மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கூட்டமொன்று நேற்று(30) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் தலைமையில் கேகாலையில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உறுப்பினர் அனைவரும் எனக்கு ஆதரவு வழங்கி வருகின்றார்கள் என்ற பயத்தில் உள்ளூராட்சி நிறுவனங்கள் கலைக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி நிறுவனங்கள் கலைக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஓன்றுக்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அதன் பதவி காலத்தை நீடிக்க வேண்டும். இது இரண்டையும் செய்வதுக்கு தகுதி இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை எப்படி அபிவிருத்தி செய்யும் என்பதை மக்கள் இன்று நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறந்த பாடம் புகட்டுவார்கள்.
தேயிலை, இறப்பர்களுக்கு சிறந்த விலையை பெற்று கொடுப்பதாக கூறினார்கள். தற்போது தேயிலை இறப்பரின் விலை இருந்ததைவிட கீழ் மட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது மக்களுக்கு செய்த பெரிய துரோகமாகும்.
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் வளங்களை பாவிப்பதுக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் தடை விதிக்கப்பட்டு இன்று அவ்வளங்களை அவர்களே பாவிக்கின்றார்கள்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி எம்மை 'கள்ளன் கள்ளன்' என்று கூறி வருகின்றது. நாம் கள்ளன் அல்ல. நாம் மக்களுக்கு சேவைதான் செய்தோம். ஐக்கிய தேசியக் கட்சிதான் முழு திருடன். மக்களை விழுங்கும் கள்வர்கள்;. இன்று மத்திய வங்கியில் ஒன்றரை மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று தெரியவில்லை. இந்த ஒன்றரை மில்லியன் ரூபாவை ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் கொள்ளை அடித்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியினர் சிறந்த திருடர்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்தள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் அமைச்சர் ஒருவரை நியமிப்பார்கள். அது மட்டுமல்ல புதையல் தோன்றுவதற்கும் அமைச்சர்களை நியமிப்பார்கள். இன்று சிறையில் இருந்த போதைப்பொருள் மற்றும் கொள்ளைகாரர்களை ஐக்கிய தேசிய கட்சியினர் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளார்கள். விடுதலை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் கொள்ளைகாரர்களை ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு பாதுகாவலராகவும்; அதிகாரிகளாகவும் நியமித்துள்ளார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மற்றும் கொள்ளைகாரர்கள், கொலைகாரர்களை ஐக்கிய தேசிய கட்சியினர் அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியினால் போதைப்பொருள் மற்றும் கொள்ளைகாரர்கள், கொலைகாரர்களை விடுதலை செய்து விட்டு எமது அமைச்சர்களை இன்னும் விடுதலை செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, இவ்வாறான கீழ்தனமான வேலைகளை செய்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியை இம்முறை தேர்தலில் தோல்வி அடைய செய்வதற்கு நாம் அனைவரும் ஒரு மனதுடன் செயல்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத். சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள், கேகாலை மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .