2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இ.தொ.கா வெளிநடப்பு; தொழிற்சங்கங்கள் அதிருப்தி

Kogilavani   / 2015 ஜூலை 02 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை, இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

முதலாளிமார் சம்மேளனமும் ஏனைய இரு தொழிற்சங்கங்களும் முன்கூட்டியே வந்திருந்த போதும், பிரதான தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் நேரம் தாமதித்து வந்தே பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது, முதலாளிமார் சம்மேளனமானது பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களிடம், "சம்பள பேச்சுவார்தையில் உங்களது நிலைப்பாடு என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளது.

"ஏற்கனவே கூறியதுபோல் 1,000 ரூபாய் சம்பளமே எமது நிலைப்பாடு" என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு பதிலளித்துள்ளதுடன் கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, இ.தொ.கா.வின் வெளிநடப்பு தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. தேர்தல் காய்நகர்த்தலே பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா வெளியேறுவதற்கு காரணமென ஏனைய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுமுள்ளன.  

மூன்றாம் கட்டப் பேச்சுவார்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த  கோரிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் நான்காம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது.

தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 450 ரூபாவிலிருந்து 500 ரூபாயாகவும் வாரத்தில் 3 நாட்கள் வேலையும் 15 கிலோகிராமுக்கு மேலதிகமாக எடுக்கும் ஒவ்வொரு கிலோகிராம் கொழுந்துக்கும் 40 ரூபாய் வீதமும் வழங்கப்படுமென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, வாரத்தில் 3 நாட்களை தவிர ஏனைய நாட்களில், எடுக்கும் கொழுந்தின் நிறைக்கேற்ப (ஒரு கிலோகிராம் 50 ரூபாய்) சம்பளம் வழங்கப்படுமென முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் ஆராயும் முகமாக இன்றைய நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்ததாக தெரியவருகிறது.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பிரதானமாக அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஏனைய தொழிற்சங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளமையானது வருத்தமளிப்பதாக ஏனைய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான காய்நகர்த்தலே இந்த வெளிநடப்புக்கு காரணமெனவும் அந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே தொழிற்சங்கங்களின் பிரதான நோக்காகும். வெறுமனே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறான காய்நகர்த்தல்களை தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளாது, தொழிலாளர்களுக்கு முறையான அடிப்படை சம்பளத்தை பெற்றுகொடுப்பதற்கு முன்வரவேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

வெளிநடப்பு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கூட்டு ஒப்பந்தத்தில் நாங்கள் கேட்ட தொகையை கொடுக்காது புதிய முறைகளை முதலாளிமார் சம்மேளனம் முன்வைக்கின்றது. இம்முறைகளை நாங்கள் படித்து அறிந்துகொள்வதற்கே நான்கு மாதங்களுக்கு மேல் செல்கின்றது. அதேபோன்று அதனை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இன்னும் காலமெடுக்கும். இதனால் பாதிக்கப்படுவது மலையக மக்களே" என்றார்.

"இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தை நடைபெறுகிறது. இவ்வாறான புதிய முறைகளை அறிமுகம் செய்வதென்றால் இரண்டு வருடங்களில் ஒரு வருடத்துக்கு முன்கூட்டியே அதனை அறிவித்திருக்க வேண்டும். இதனை அவர்கள் செய்யத் தவறியுள்ளனர்.

எனவே, நாங்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் பின்வாங்குவதால் இக்கூட்டத்திலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்ததுடன் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விளகிகொண்டுள்ளோம்" என முத்துசிவலிங்கம் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .