2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சட்டவிரோத மினி பார்களால் பெண்கள் அவதி: குடும்ப வன்முறை அதிகரிப்பு

Kogilavani   / 2015 ஜூலை 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் வட்டவளை, செனன் பகுதிகளில்  இயங்கிவரும் சட்டவிரோத மினி பார்களால் (மதுபான விற்பனை நிலையங்கள்) தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன் மேற்படி பிரதேசங்களில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக பிரதேச பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வட்டவளை, செனன் பகுதியில் அதிகளவில் மதுபானம், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தோட்டத்தின் 6 பிரிவுகளுக்கும் வெள்ளை வானின் மூலம் மதுபானம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மினி பார்களில் விநியோகிக்கப்படுவதாக பிரதேச பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மினிபார்களில் விற்பனைசெய்யப்படும் மதுபானங்களை தமது பிள்ளைகள், கணவர்கள் அருந்துவதால் தாம் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன் குடும்ப வன்முறைக்கும் உள்ளாவதாக பிரதேச பெண்கள் அங்கலாய்க்கின்றனர்.

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுப்பதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை எனவும் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பெண்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, தமிழ்கல்வி, இந்து கலாசார, நன்னீர் மீன்பிடிதுறை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் வரதபாண்டி ராமேஷ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோது, 'இதுவரை இவ்விடயம் தொடர்பில் எனக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .