Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 16 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமையும் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேச்சுவாரத்தையலிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவருகிறது.
தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
தொழில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்திருந்தது.
இதற்கமைவாக 510 ரூபாய் அடிப்படை சம்பளமும் ஊக்குவிப்புத் தொகையாக 40 ரூபாயும் வரவுத்தொகையாக 140 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியுடன் சேர்த்து மொத்தமாக 766.50 ரூபாய் வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்றுகொள்ளாத தொழிற்சங்கங்கள் தாம் ஏற்கெனவே கூறியிருந்த தொகையிலிருந்து பின்வாங்கவில்லை எனவும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகவும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, முதலாளிமார் சம்மேளனமும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் நேற்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவாரத்தை மாலை 2 மணிவரை நீடித்ததாகவும் இறுதியில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாகவும் அடுத்தவாரம் மீண்டும் இப்பேச்சுவார்த்தை நடைபெறலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் உடன்படிக்கைகள், மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18, மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22, நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ம் நடைபெற்றது.
இம்முறை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தன. இதனால், கடந்த திங்கட்கிழமை (6) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை முன்னெடுத்ததுடன் ஓரிரு தினங்களின் பின்னர் தோட்ட நிர்வாகங்களும் பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழில் ஆணையாளர் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றதுடன் அது நேற்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலே நேற்றைய பேச்சுவார்த்தை தொழில் உறவு அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் நடைபெற்றது.
தொழில் அமைச்சர், முதலாளிமார் சம்மேளனத்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மேற்படி சம்பளத்தை(766.50) முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பின்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட மக்களால் கடந்த ஒருவாரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்துக்கு சம்பளத்தை வழங்குமாறும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடத்துமாறும் கோரியுள்ளது.
பின்னர், இருதரப்பையும் முன்வைத்து தொழில் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதன்போது மேற்படி கோரிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்ததுடன் பெருந்தோட்ட மக்களுக்காக வழங்கப்படும் 19 நாட்களுடன் கூடிய விடுமுறை பணத்தை இதில் சமப்படுத்திகொள்ளுமாறு கோரியுள்ளது. இதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காத நிலையில் இலங்கை தொழிலாளர் கங்கிரஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக தெரியவருகிறது.
பெருந்தோட்ட மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பர்' என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago